லண்டன்: உலகின் எண்ணெய் ஜாம்பவான்களில் ஒன்றான ஷெல் நிறுவனத்தினை பற்றி அதிகம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகின் மிகப்பெரிய மூன்றாவது எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஷெல் 80 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக டிவிடெண்டினை குறைத்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, இப்படி ஒரு மோசமான நிலையினை சந்தித்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஷெல் தனது பங்கினை திரும்ப வாங்கும் திட்டத்தினை நிறுத்தியுள்ளது. மேலும் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் நிகரலாபம் பாதியாக குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
உற்பத்தி குறைப்பு
அதுமட்டும் அல்ல, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை கிட்டதட்ட கால் பங்காகக் குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதெல்லாவற்றையும் விட, இந்த அறிக்கை வெளியான பின்பு 6.7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கொரோனாவினால் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார தன்மை, பலவீனமான தேவை, இதனால் பொருட்களின் பலவீனமான விலை, அதிகளவிலான ஏற்ற இறக்கம் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது..
80 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மோசமான நிலை
1940-க்கு பிறகு இந்த நிறுவனம் ஒரு போதும் அதன் ஈவுத் தொகையை குறைக்கவில்லை என்ற பெருமிதத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோவினால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏன் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் 1980 வீழ்ச்சிகளில் கூட இந்த நிறுவனம் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியினால் அதன் டிவிடெண்டினை குறைத்த முக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
டிவிடெண்டினை குறைக்கும்
ஷெல் நிறுவனம் அதன் 2019ம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களுக்கு அதன் டிவிடெண்டினை 47 செண்டில் இருந்து, 16 செண்டுகளாக குறைக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஷெல் நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 15 பில்லியன் டாலர் டிவிடெண்டினை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியும் குறைப்பு
கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தி தேவை 6 சதவீதம் வீழ்ச்சியடையக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல ஷெல் நிறுவனம் கடந்த மாதம் இந்த ஆண்டு மூலதன செலவினைத் சுமார் 25 பில்லியன் டாலர்களாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 20 பில்லியன் டாலர்களாக குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
செலவினை குறைக்கும்
அதுமட்டும் அல்ல அடுத்த 12 மாதங்களில் இயக்க செலவில் இருந்து 3 பில்லியன் டாலர் முதல் 4 பில்லியன் டாலர் வரை குறைக்க கூடும் என்றும் கூறியுள்ளது. அதோடு அதன் சுத்திகரிப்பு வர்த்தகத்தினை 40 சதவீதம் வரை குறைப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைக்க திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.