பைக், கார் உள்பட வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் இன்சூரன்ஸ் கட்ட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு தற்போது புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதை அடுத்து இந்த புதிய திட்டத்தில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.
புதிய காப்பீடு திட்டம்
புதிய காப்பீடு திட்டத்தின்படி ஒரு வாகனத்தை ஓட்டுபவரின் செயல்பாட்டை பொறுத்து அவர் அந்த வாகனத்திற்கு செலுத்தும் காப்பீடு தொகை மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு வாகனத்தை ஓட்டும் ஓட்டுநரின் வேகம், வாகனத்தை எப்படி இயக்குகிறார், சாலை விதிகளை எப்படி பின்பற்றுகிறார் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பீட்டு கட்டணம் அதிகமாகும் அல்லது குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த காப்பீடு
எடுத்துக்காட்டாக அதிகமாக வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக காப்பீடு தொகையும், குறைவாக வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த காப்பீடு தொகையும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களான பைக், கார், லாரி, வேன் ஆகிய அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழில்நுட்ப அடிப்படையில் காப்பீடு திட்டம் வழங்கப்பட உள்ளது என்றும் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஒரு வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுனர் வாகனத்தை எப்படி, எவ்வாறு இயக்குகிறார் என்பதற்கு ஏற்ப காப்பீட்டை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுவதற்கு ஏற்ப கட்டணம்
வாகனத்தை ஓட்டுவதற்கு ஏற்ப காப்பீடு என்பது வாகனத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப காப்பீடு என்பதை குறிக்கும். எடுத்துக்காட்டாக 1500 சிசி கார்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான காப்பீடு இருந்தாலும் வாகனத்தை சிலர் அதிகமாக பயன்படுத்தினால் அதே கட்டணம் என்றும் ஆனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்துவதற்கும் அதே கட்டணம் என்றும் தற்போதைய நிலை உள்ளது.
எவ்வளவு தூரம் பயணம்?
ஆனால் புதிய திட்டத்தின் கீழ் இந்த கட்டணம் மாறுபடும். வாகனத்தை எத்தனை கிலோமீட்டர் ஓட்டி இருக்கின்றோம்? எவ்வளவு தூரம் பயணித்து இருக்கின்றோம்? என்பதை பொறுத்து கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன பயன்பாடு
அதேபோல் ஒரு ஓட்டுநர் அல்லது ஒரு வாகன உரிமையாளர் அந்த வாகனத்தை எவ்வாறு இயக்குகிறார் என்பதை பொருத்தும் வாகன கட்டணம் மாறுபடும். வாகனம் ஓட்டுபவரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றும், வாகனத்தை இயக்கும் முறை, வேகம், சாலை விதிகளை மதித்தல், வாகனப்பயன்பாட்டின் அளவு ஆகியவை பொறுத்து கட்டணம் குறையும் அல்லது கூடும்.
அனைத்து வாகனங்களுக்கும் ஒரே காப்பீடு
அதேபோல் இருசக்கர வாகனம், கார், வேன் என ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருந்தால் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக காப்பீடு எடுக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாகனங்களுக்கும் சேர்த்து ஒரே மாதிரி ஒரே காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்பதும் இந்த புதிய திட்டத்தில் உள்ள சிறப்பம்சமாகும்.
ஓட்டுனர்களின் தரம்
இதற்கு முன் ஓட்டுநர்களின் தரத்தை பொறுத்து கட்டணம் செலுத்தும் வசதி இல்லை என்ற நிலையில் தற்போது இந்த வசதி வந்துவிட்டதால் ஓட்டுநர்கள் இனி வாகனத்தை சிறப்பாக கையாள்வார்கள் என்றும், சாலை விதிகளை மதித்து ஓட்டுவார்கள் என்றும் அதற்கான வெகுமதி தான் இந்த காப்பீடு கட்டண குறைப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை நல்ல முறையில் இயக்குபவர்கள் யார்? மோசமாக ஓட்டுபவர்கள் யார் என்பது இனி அவர்கள் கட்டும் காப்பீடு அளவை பொறுத்தே தெரிந்து விடும்.
இதுகுறித்து பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் தொழில்நுட்ப அதிகாரி ராமலிங்கம் அவர்கள் கருத்து கூறும்போது 'மோட்டார் காப்பீட்டில் கொண்டிருக்கும் புதிய திட்டத்தின் மூலம் காப்பீடு எடுக்கும் தொகை குறையும் என்றும் வாகனத்தை இயக்குவதற்கு ஏற்பட காப்பீடு பிரீமியம் வசூலிக்கப்படும் என்பது மக்களுக்கு அதிகமான பாதுகாப்பு தரும் என்றும் கூறியுள்ளார். வாகனத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு என்பதால் வாகனத்தை தேவை இருந்தால் மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.