இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்குள்ளான சிறுவர்களுக்கு, 'கோவோவாக்ஸ்' கொரோனா தடுப்பூசி வழங்கச் சென்ற வாரம் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து கோவோவாக்ஸ் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வருவதாகத் திங்கட்கிழமை கோவின் இணையத்தில் பட்டியலிடப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கோவோவாக்ஸ் தடுப்பூசி விலையை சீரம் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை குறைப்பு
செவ்வாய்க்கிழமை வரை 'கோவோவாக்ஸ்' கொரோனா தடுப்பூசி ரூ.900 + ஜிஎஸ்டி என விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை இப்போது ரூ.225 + ஜிஎஸ்டி என விலை குறைத்து சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனை
தனியார் மருத்துவமனைகளிலும் 225 ரூபாய் + ஜிஎஸ்டி உடன் கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணத்தைச் செலுத்தி கோவோவாக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவின் இணையதளத்திலும் இந்த விலை மாற்றம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ்
முதல் டோஸ் கோவோவாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு 21 நாட்கள் இடைவேளையில் 2வது டோஸ் தடுப்பூசியைப் போடவேண்டும்.
அவசரக் கால பயன்பாடு
இந்தியாவில் கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, அவசரக் கால பயன்பாட்டுக்குச் செலுத்த மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
கோவோவாக்ஸ்
உலகளாவிய சோதனைகளில் கோவோவாக்ஸ் 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை நிரூபித்துள்ளது என்றும், தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரக்கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2 தடுப்பூசிகள்
இந்தியாவில் இப்போது 12 வயது முதல் 14 வயது சிறுவர்களுக்கு பையாலஜிக்கல்-இ உற்பத்தி செய்து வரும் கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியும், 15 முதல் 18 வயதுக்குள் வருபவர்களுக்கு பாரத் பையோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி
மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உலக நாடுகள் செலவு செய்து தங்கள் மக்களுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் தற்போது தடுப்பூசி வழங்குவதற்காகவும் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள். தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.