தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில், சிங்கப்பூர் நிறுவனமான IGSS வென்சர்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கும், தமிழக அரசுக்கும் இடையே செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்ப பூங்க அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சர்வதேச அளவில் செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இது உள்நாட்டு தேவையினை பூர்த்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும்.
300 ஏக்கரில் செமிகண்டக்டர் பூங்கா
எல்லாவற்றிற்கும் மேலாக இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். தமிழ் நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக, தமிழ் நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடேட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
எவ்வளவு முதலீடு?
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் நாட்டில் 25,600 கோடி ரூபாயினை சிங்கப்பூர் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 1500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திட்டம்?
இந்த டெக் பார்க் சென்னைக்கு அருகில் அமையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் எங்கு என்பது அறிவிக்கப்படவில்லை. இந்த டெக் பூங்காவில் சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்திப் பொருள் சப்ளையர்கள், உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் (OSATS) ஆகிய திட்டங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த திறன்
மற்ற திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தும் போது, 25,000 பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு செமிகண்டக்டர் தொழில்நுட்ப குழுமமாகும்.
இந்தியா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் 20% மட்டுமே கொண்டிருப்பதாலும், இந்த துறையில் பெரியளவிலான முதலீடுகளை ஈர்க்க தமிழ் நாடு திட்டமிட்டுள்ளது.