ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு காரணமாக பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்தியுள்ளன.
அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்த குளிர்பானங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மாற்று பொருளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளே 700 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
ஜூலை 1 முதல் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தடை அமலுக்கு வந்த பின்னரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை செய்துள்ளது. அந்தவகையில் நேற்று டெல்லியில் குடிமை அதிகாரிகள் சோதனை செய்ததில் முதல் நாளே சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றியதோடு 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன்
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இதுகுறித்து கூறிய தகவலின் படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்து கண்காணிக்க குழுக்கள் உருவாக்கி உள்ளோம் என்றும் இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மூலம் தடையை அமல்படுத்துவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
வணிகர்கள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கினாலும் அதை வாங்க மாட்டோம் என்று கூறுமளவுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பறிமுதல்
இந்த நிலையில் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தியதில் 689.01 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 368 வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மண்டல அளவில் குழுக்கள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் இருப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டை அகற்ற மண்டல அளவில் மொத்தம் 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
என்னென்ன பொருட்கள்
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை குறித்த விதிகளில் பலூன்கள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் (தெர்மாகோல்), தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள், இயர்பட் குச்சிகள் மற்றும் குச்சிகள் உள்ளிட்டவை அடங்கும் என டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
சணல் - துணிப்பை
மேலும் பொதுமக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சணல் அல்லது துணி பைகளை பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருவதாகவும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் இல்லை
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்கள் கூறியபோது பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து தொழில் துறையினர் மற்றும் பொது மக்களுக்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துவிட்டது என்றும் இனிமேல் கூடுதலாக அவகாசம் அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் அனைவருடைய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அபராதம் - சிறை
மேலும் தடையை மீறும் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 15ஆவது பிரிவின் கீழ் அந்தந்த மாநகராட்சிகள் தண்டனை குறித்த முடிவை எடுக்கலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.