கொரோனா - புத்தாண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு கொடிய நோய், தினமும் மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் மொத்த சீனாவும் முடங்கியுள்ளது. இதனால் சீனாவில் தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழில்நுட்ப சேவை என அனைத்தும் 90 சதவீதம் செயலற்றுக் கிடக்கிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு அடுத்த ஒரு வாரத்தில் முழுமையாக முடங்கவும், ஊழியர்களுக்குத் தற்காலிக விடுப்பு அளிக்கும் சூழ்நிலையிலும் ஏற்பட்டு உள்ளது.
சியோமி
சீனாவிற்கு அடுத்தாக இந்தியாவில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் தயாரிக்கும் சியோமி நிறுவனத்திற்குச் சீனாவில் இருந்து உதிரி பாகங்கள் வராத காரணத்தால் தயாரிப்புப் பணிகள் முடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா-வின் பாதிப்பு
சீனாவில் தற்போது கொரோனா-வின் பாதிப்புகளைக் குறைக்க முடியாத காரணத்தால் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் விடுப்பு கொடுக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் சந்தை இயங்காது எனத் தெரிகிறது. இதனால் இந்தியாவிற்கு ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களும் ஏற்றுமதி செய்யப்படுவது சந்தேகம் தான்.
ஐபோன்
அதேபோல் இந்தியாவில் தற்போது சில்லறை விற்பனையாளர்களிடம் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ ஸ்டாக் மிகவும் குறைவான அளவில் மட்டுமே இருப்பதாலும், அதனைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியாத காரணத்தாலும் ஐபோன் விற்பனை இந்தியாவில் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது.
தொழிற்சாலைகள் முடக்கம்
சீனாவில் இருந்து உதிரி பாகங்கள் வராத காரணத்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம்.
விற்பனையில் சரிவு
அதேபோல் விற்பனைக்குத் தேவையான ஸ்மார்ட்போன் ஸ்டாக் இல்லை என்பதால் இந்தியாவில் பிப்ரவரி மாதம் ஸ்மார்ட்போன் விற்பனையில் 10-15 சதவீதம் வரையில் குறையலாம் எனத் தெரிகிறது. தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள ஸ்மார்ட்போன் பற்றாக்குறையின் காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது, அல்லது குறைந்தபட்சம் ஆஃபர் என்ற பெயரில் விலை குறைக்கப்படாமல் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
307 பேர் மரணம்
சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று, கிட்டதட்ட 1307 பேர் தற்போது கொரோனா-வால் மரணமடைந்து உள்ளதாகச் சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கையாகப் பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மக்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது.