நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வண்கொடுமைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மறு பக்கம் திருட்டுத் தொழில்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி டெல்லி விமான நிலையத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தைப் பற்றித் தான் இன்று பார்க்கப் போகிறோம்.
இந்த திருட்டுத் தனத்தை, (CISF - Central Security Force) மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினரே உறுதி செய்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து இருக்கிறார்கள்.
என்ன திருட்டுத் தனம்
சாப்பிடும் நிலக் கடலை (Ground Nut), பிஸ்கெட், ஏதோ சில வகையான அசைவ உணவுகளுக்குள் பணத்தை பதுக்கி வைத்து கடத்த முயன்று இருக்கிறார் ஒரு விமான பயணி. சந்தேகப்பட்டு அவரைச் சோதித்த போது, கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். இதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
யார் அவர்
சமீபத்தில், முராத் ஆலம் என்பவர் துபாய் நாட்டுக்குச் செல்ல, டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இருக்கிறார். வழக்கம் போல, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் எல்லா பயணிகளையும் சோதனை செய்து இருக்கிறார்கள்.
கூடுதல் சோதனை
முராத் ஆலம் மற்றும் அவர் கொண்டு வந்த பைகளைச் சோதனை செய்த போது, பைகளில் நிறைய நிலக் கடலை, பிஸ்கெட் பாக்கெட்கள் மற்றும் சில அசைவ உணவுகள் இருந்து இருக்கின்றன. சந்தேகப்பட்டு, சில நிலக் கடலைகளை உடைத்துப் பார்த்து இருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
ஒரே பணம்
உடைத்துப் பார்த்த நிலக் கடலைகளில் எல்லாம் பணம். அதுவும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் அல்ல, வெளிநாட்டு கரன்ஸிகள். நிலக் கடலையில் தான் கரன்ஸிகள் சிக்கியது. பிஸ்டெட்டில் ஏதாவது இருக்கிறதா..? என சோதனை செய்து இருக்கிறார்கள். ஆச்சர்யமாக பிஸ்கெட்டிலும் பணமாக வந்து இருக்கிறது.
உணவு
என்னய்யா இது என மீதம் இருந்த அசைவ உணவுப் பொருளையும், சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த அசைவ உணவுத் துண்டுகளுக்கு மத்தியில், பிளாஸ்டிக் கவரில் வெளிநாட்டுக் கரன்ஸிகளைச் சுருட்டி வைத்திருக்கிறார். சாப்பிடும் கறியில் கூட கரன்ஸியா என அதிகாரிகள் வாயைப் பிழந்து இருக்கிறார்கள்.
மொத்தம் எவ்வளவு
முராத் ஆலம் என்பவரிடம் இருந்து, சோதனை செய்து பிடிபட்ட மொத்த வெளிநாட்டு கரன்ஸியின் மதிப்பு சுமாராக 45 லட்சம் ரூபாய் தேறுமாம். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் அதிகார பூர்வ வலைதளமே சொல்லி இருக்கிறது. அதோடு சோதனை செய்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
சுங்க வரித் துறை
பிடிபட்ட மொத்த வெளிநாட்டு கரன்ஸி மற்றும் கொண்டு வந்த முராத் ஆலத்தை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர், சுங்க வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கிறார்களாம். விரைவில் சுங்க வரித் துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.