ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் முதலீட்டின் வாயிலாக மிகவும் குறைந்த காலகட்டத்தில் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான OYO கடந்த சில மாதங்களாகக் கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
OYO நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகத் தான் முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களையும் லாபகரமான நிறுவனமாக மாற்ற முயற்சிக்கும் பணியில் இறங்கியுள்ள காரணத்தால் தற்போது OYO நிறுவனம் 5000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தயாராகியுள்ளது.
சர்வதேச வர்த்தகம்
OYO ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் ஊழியர்களும் பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சி இல்லையென்றாலும் தொடர்ந்து வர்த்தக விரிவாக்கமும், மிதமான வளர்ச்சியும் இருந்து வந்தது.
கொரோனா பாதிப்பு
ஆனால் சீனாவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு நிலையில் கொரோனா பெரிய அளவிலான வர்த்தகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட வர்த்தக சரிவை காரணம் காட்டி தற்போது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தயாராகியுள்ளது OYO நிர்வாகம்.
தற்போது OYOவின் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 30000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், சுமாப் 17 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் பிடி அடுத்த சில வாரங்களில் இந்நிறுவனத்தில் இருந்து குறைந்தது 5000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
சாப்ட்பேங்க் பிரச்சனை
OYO 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்த பின்பு இந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதனால் OYOவின் லாபம் அதிகளவில் குறைந்தாலும் வர்த்தக வளர்ச்சி சிறப்பாகவே இருந்தது.
ஆனால் OYO நிறுவனத்தில் முதலீடு செய்த சாப்ட்பேங்க்-இன் மற்றொரு முதலீடான WeWork மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாகத் தான் முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களையும் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் உடன் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது சாப்ட்பேங்க்.
இதன் வாயிலாகவே OYO ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து லாப கணக்குக் காட்டு முடிவு செய்துள்ளது.