முதலாளிகள் எப்போதும் லாபம், வருமானம் என்ற கண்ணோட்டத்தில் தான் இருப்பார்கள், இதுவே கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதைப் பிரதிபலிக்கும் வகையில் கொரோனா மக்களைக் கொடூரமாகப் பாதித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் வர்த்தகம் பாதித்துள்ளது.
வர்த்தகப் பாதிப்புக் காரணம் காட்டி இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல கோடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை வீட்டு துரத்த முடிவு செய்துள்ளது.
ஸ்பெயின்
கொரோனா காரணம் காட்டி பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதைக் கவனித்த ஸ்பெயின் அரசு, கொரோனா பாதித்துள்ள இந்திய காலகட்டத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தடை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தற்காலிகமாக அனைத்து ஊழியர்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விடுமுறை கொடுக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
யோலான்டா டியாஸ்
அதுகுறித்து ஸ்பெயின் நாட்டின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் யோலான்டா டியாஸ் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது. இந்த மோசமான நிலையில் ஊழியர்களை நிறுவனங்கள் வஞ்சிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி
தற்போது ஸ்பெயின் நாட்டில் மக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவை அனைத்தும் கிடைக்கும் வகையில் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது என இந்நாட்டு அரசு நிறுவனங்களுக்குக் குறுகிய கால அவசர கடன் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது. கொரோனா-வை எதிர்ப்பதற்காக 200 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது ஸ்பெயின் அரசு.
இந்தியா
இதேபோல் அறிவிப்பை இந்தியாவிலும் கூடிய விரைவில் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்க செய்யத் திட்டமிட்டுள்ளது. இது நடக்கும் முன் மோடி அரசு இப்பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் அதிரடியான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஐடி துறை
ஐடி நிறுவனங்கள் வர்த்தகம் தற்போது அதிகளவில் பாதித்துள்ள நிலையில், நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, flexi அல்லது அதிகளவிலான தற்காலிக ஊழியர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய வர்த்தகம் கிடைக்கும் வரையில் பழைய வர்த்தகத்தை இயல்பாக நடத்தவும், செலவுகளைக் குறைக்க முடியும் என்பது ஐடி நிறுவனங்களின் திட்டமாக உள்ளது.