இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
தொழில் போட்டி காரணமாக பயணிகளை கவருவதற்காக அவ்வப்போது சலுகை அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் துபாய் உள்பட உலகில் உள்ள 28 முக்கிய விமான நிலையங்களில் தனது பயணிகளுக்காக டாக்சி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட்
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகளுக்கு அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது புதிதாக டாக்சி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாக்சி சேவை
ஸ்பைஸ்ஜெட் விமானங்களை பயணிகள் முன்பதிவு செய்யும்போது டாக்சி சேவையையும் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் டாக்சி சேவையின் விவரங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த எஸ்எம்எஸ்-இல் பயணிகளின் பிக்-அப் இடம் மற்றும் பிக்-அப் நேரம் பற்றிய விவரங்கள் இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயண வசதி
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் இந்த டாக்சி சேவை வசதி, பயணிகளின் பயணத்தை மிகவும் வசதியாகவும், தொந்தரவில்லாததாகவும் மாற்றும் என்றும், அவர்கள் புறப்படுவதற்கு நன்கு பராமரிக்கப்பட்ட டாக்சி ஒதுக்கப்படும் என்றும், அதேபோல் அனுபவமுள்ள ஓட்டுனர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
எண்ட்-டு-எண்ட் சேவை
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி டெபோஜோ மகரிஷி அவர்கள் கூறும்போது, 'இந்த எண்ட்-டு-எண்ட் சேவை எங்கள் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என்றும், வீட்டு வாசலில் சேவை தொடங்கப்படும் இந்த சேவை பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் கூறினார்.
காத்திருக்க தேவையில்லை
ஒரு நிமிடம் கூட கூடுதலாக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் சரியான நேரத்திற்கு டாக்சி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு வரலாம் என்றும் காலதாமதம் ஆகிவிடுமோ என்ற அழுத்தத்தை நாங்கள் போக்குகிறோம்' என்றும் தெரிவித்தார்.
கூடுதல் டாக்சி சேவைகள்
முதல் கட்டமாக தற்போது துபாய் உள்பட 28 விமான நிலையங்களில் இந்த டாக்சி சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இந்த டாக்சி சேவைக்கு பயணிகள் தரும் வரவேற்பை பொருத்து மேலும் ஒரு சில விமான நிலையங்களில் விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த டாக்சி சேவை வசதிக்கு விமான பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications