ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் மூக்குச் சக்கரம் பழுதடைந்ததால் துபாயில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானம் திங்கள்கிழமை தாமதமானது. 24 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஒன்பதாவது சம்பவம் இதுவாகும்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு விமானச் சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அடுத்தடுத்து ஏற்படும் கோளாறுகள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் மாஸ் விடுமுறை காரணமாகச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 24 நாட்களில் 9 சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
VT-SZK பதிவு எண் கொண்ட போயிங் 737 மேக்ஸ் விமானம் திங்கள்கிழமை மங்களூரு-துபாய் விமானத்தை இயக்கியது. விமானம் தரையிறங்கிய பிறகு, ஒரு பொறியாளர் ஆய்வு செய்தார், மேலும் மூக்கு சக்கர ஸ்ட்ரட் (strut) வழக்கத்தை விடக் கம்பிரஸ் ஆகி இருப்பதைக் கண்டறிந்தார் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
துபாய்-மதுரை விமானம்
பொறியாளர் பின்னர் விமானத்தை இயக்க வேண்டாம் என முடிவு செய்தார், பின்னர்த் துபாய்-மதுரை விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் மற்றொரு விமானத்தை மும்பையில் இருந்து துபாய்க்கு அனுப்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஜிசிஏ
ஜூன் 19 முதல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிஜிசிஏ ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மோசமான உள் பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்காதது பாதுகாப்பு விளிம்புகளின் சீரழிவுக்கு வழிவகுத்துள்ளன என்று மறுஆய்வு தெரிவித்துள்ளது.
ஜூலை 2 சம்பவம்..
ஜூலை 2 ஆம் தேதி, ஜபல்பூருக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், 5,000 அடி உயரத்தில் கேபினில் புகைபிடித்ததைக் குழு உறுப்பினர்கள் கவனித்ததை அடுத்து டெல்லி திரும்பியது. 24 நாட்களில் பதிவான ஒன்பது சம்பவங்களில் இதுவும் ஒன்று.
போட்டி
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏற்கனவே கடுமையான போட்டி இருக்கும் வேளையில் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகியவை கூடுதலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.