இந்தியப் பொருளாதாரம் தொடங்கி, இந்தியாவில் அரசியல் சூழல்கள் வரை இப்போது அத்தனை சிறப்பாக இல்லை. எங்கு திரும்பினாலும் போராட்டம், பிரச்னைகள் தான்.
இந்த நேரத்தில் ஒரு பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்.
யார் அவர்..? என்ன பிரச்சனை..? எங்கு நடந்தது..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விமான பயணம்
கடந்த டிசம்பர் 21, 2019, சனிக்கிழமை தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த சம்பவத்தின் நடு நாயகமாக இருந்தவர் நம் கோட்ஸே புகழ் சாத்வி பிரக்யா சிங் தாகூர். நம் போபல் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் மேலே சொன்ன தேதியில் டெல்லி முதல் போபால் வரை செல்ல விமானத்தில் முன் பதிவு செய்து இருக்கிறார்.
விமான விவரங்கள்
சாத்வி பிரக்யா சிங் தாகூர் முன்பதிவு செய்தது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் SG 2498 விமானத்தில் 1ஏ என்கிற இருக்கையை முன்பதிவு செய்தாராம். இதை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் தன் ஸ்டேட்மெண்டில் உறுதி செய்து இருக்கிறது. சிக்கலே இந்த இடத்தில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது.
சர்க்கர நாற்காலி
பொதுவாக சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கு இந்த அவசர வரிசை இருக்கையை (Emergency Row Seats) வழங்க மாட்டார்களாம். ஆனால் நம் சாத்வி பிரக்யா சிங் தாகூர், சில உடல் நலக் குறைவு காரணமாக, டெல்லி விமான நிலையத்துக்கு தன் சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே தான் வந்து இருக்கிறார்.
மாற்று இருக்கை
சர்க்கர நாற்காலியில் பிரக்யா சிங் வந்ததால், விமான குழு உதவியாளர்கள், பிரக்ய சிங் தாகூரை மாற்று இருக்கையில் அமரச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்கள். முதல் வகுப்பு இல்லை, வசதிகள் இல்லை என நம் பிரக்யா சிங் தாகூர் ஒப்புக் கொள்ளாமல் சண்டை பிடித்து இருக்கிறார். சண்டை சுமார் 45 நிமிடங்கள் நடந்து இருக்கிறது.
பதில்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஒரு பயணி "நீங்கள் மக்களின் பிரதிநிதி. மக்களை சிரமப்படுத்துவதோ அல்லது பிரச்னைக்கு உள்ளாக்குவதோ உங்கள் வேலை அல்ல. வேண்டுமானால், நீங்கள் அடுத்த விமானத்தில் வாருங்கள். முதல் வகுப்பு உங்கள் உரிமை அல்ல" என அதே விமானத்தில் பயணித்த ஒருவர் பதில் கொடுத்து இருக்கிறார்.
வாக்கு வாதம்
அதன் பிறகும் வாக்குவாதம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. "நீங்கள் ஒரு தலைவர், உங்களால் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளாகிறார் என்றால், உங்களுக்கே ஒரு அடிப்படை மனிதாபிமானம் இருக்க வேண்டும். நீங்கள் இப்படி பயணிகளை காக்க வைத்து விமான நிறுவனத்தை மிரட்டுவதற்கு வெட்கப்பட வில்லை" என பதில் கொடுத்து இருக்கிறார் அந்த பயணி.
வார்த்தை
உடனே சாத்வி பிரக்யா சிங் தாகூர் தரப்பு, பதில் கொடுத்த நபர், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மீண்டும் பதில் கொடுத்த அந்த நபர் "நான் மிகச் சரியான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறேன்" என போகிற போக்கில் பதில் கொடுத்து இருக்கிறார்.
கோபம்
என்ன ஆனதோ தெரியவில்லை. நம் பிரக்யா சிங் தாகருக்கு கோபம் அடங்கவில்லை போல. போபால் விமான நிலைய இயக்குநரிடம், இந்த பிரச்னை குறித்து புகார் கொடுத்துவிட்டுச் சென்று இருக்கிறாராம். அதோடு விமான பணியாளர்களும் சரியாக நடந்து கொள்ளவில்லை எனவும் புகார் கொடுத்து இருக்கிறாராம்.
ஸ்பைஸ் ஜெட் தரப்பு
"எங்கள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பிரக்யா தாகூர் பயணித்தது மகிழ்ச்சி. அவர் 1ஏ இருக்கையை முன் பதிவு செய்தது உண்மை தான். ஆனால் சர்க்கர நாற்காலியில் வரும் பயணிகளுக்கு அந்த முதல் வரிசை அவசர இருக்கையை வழங்குவதில்லை"என இந்த பிரச்னை குறித்து விளக்கம் சொல்லி இருக்கிறது ஸ்பைஸ் ஜெட்.
என்ன மேடம்... நாடு இருக்கிற நிலைமைல இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போட்டா எப்படி..? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.