இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் அட்டாக் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் நேற்று இரவு நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் ransomware சைபர் அட்டாக் நடந்துள்ளது.
இந்தச் சைபர் அட்டாக் மூலம் ஏற்பட்ட பாதிப்பு சில மணிநேரத்திலேயே சரி செய்யப்பட்ட நிலையில் பெரிய பாதிப்புகள் தளர்த்தப்பட்டு உள்ளது என ஸ்பைஸ்ஜெட் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
ஆனால் டிவிட்டரில் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
ஸ்பைஸ்ஜெட்
செவ்வாய்க்கிழமை இரவு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஒரு பிரிவு சேவைகளில் மட்டும் ransomware சைபர் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் புதன்கிழமை காலை வரை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.
ransomware தாக்குதல்
இந்த ransomware தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணிகள் பல்வேறு விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர். ஆனால் இந்தப் பிரச்சனை புதன்கிழமை காலைக்குள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு சரி செய்து உள்ளதாக அறிவித்துள்ளது.
விமானப் பயணி மறுப்பு
Ransomware சைபர் தாக்குதலில் மீண்டு வந்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தற்போது அனைத்து விமானங்களையும் இயல்பான நேரத்தில் இயக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணி ஒருவர் மறுத்துள்ளார்.
3.45 மணிநேரம் தாமதம்
விமானத் தாமதம் குறித்து முதித் செய்த டிவீட்டுக்கு ஸ்பைஸ்ஜெட் டிவிட்டரில் பதில் அளித்தது. ஆனால் முதித் அதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்துகொண்டே வீடியோ உடன் 3.45 மணிநேரம் தாமதமாகியுள்ளது. விமானத்தை ரத்துச் செய்யுங்கள் அல்லது இயக்குங்கள், விமான நிலையத்தில் அல்ல விமானத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். காலை உணவு கூட அளிக்கப்படவில்லை, எவ்விதமான பதிலும் இல்லை என டிவீட் செய்துள்ளார்.
ஸ்ரீநகர் விமானம்
இதேபோல் சௌரப் கோயல் என்பவர் ஸ்பைஸ்ஜெட்-ன் மிகவும் மோசமான வாடிக்கையாளர் சேவை. இன்று டெல்லியில் இருந்து காலை 6.25 மணிக்கு ஸ்ரீநகர் SG 473 க்கு எனது விமானம் கிளம்ப வேண்டும், ஆனால் இன்னும் விமான நிலையத்தில் உள்ளது என 9.16 மணிக்கு டிவீட் செய்துள்ளார். மேலும் அவர் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்குத் தாமதம் குறித்து எந்த விபரமும் தெரியவில்லை, பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.