இலங்கையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் எப்படியேனும் மீண்டு வந்துவிட அந்த நாட்டு அரசு பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஒரு புறம் அரசியல் பிரச்சனை எனில், மறுபுறம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் விலைவாசி ஏற்றம், உணவு பொருட்கள் பற்றாக்குறை, எரிபொருள், மருத்துவ பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதற்கிடையில் இலங்கை இந்த இக்கட்டான பிரச்சனையில் மீண்டு வர பல்வேறு நாடுகளுடன் உதவி கேட்டு வருகின்றது. மேலும் ஐஎம்எஃப் உடனும் கடனுதவிக்காக பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்றது.
காய்கறி தோட்டம்
இப்படி பல்வேறு இக்கட்டான பிரச்சனைகளுக்கு மத்தியில், உடனடியாக தீர்வு காண முடியாது என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இலங்கையின் முனிசிபல் கவுன்சிலில் உள்ள 600 ஏக்கர் அலங்காரத் தோட்டத்தில், மக்களுக்கு பயனுள்ள வகையில் காய்கறிகள் விளைவிக்கும் ஒரு அழகான தோட்டமாக மாற்றியுள்ளது.
பிரச்சனை ஓயவில்லை
இந்த தீவு நாடானது கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே பல நெருக்கடியினை சந்தித்து வருகின்றது. நெருக்கடிகளை சமாளிக்க போராடி வந்தாலும் இன்று வரையில் பிரச்சனைகள் ஓய்ந்தபாடாக இல்லை. இலங்கையில் கெமிக்கல் உரங்கள் தடை செய்யப்பட்ட நிலையில் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை
இதற்கிடையில் தான் இலங்கை பணவீக்கத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளது. ஏற்கனவே அன்னிய செலவாணி கையிருப்பு சரிவின் காரணமாக, இறக்குமதியும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. ஆக இதனால் பற்றாக் குறையானது அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு விலைவாசியினை ஊக்குவித்துள்ளது. இதனால் மக்கள் காய்கறிகளையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கம்
சமீபத்திய தரவின் படி, இலங்கையின் பணவீக்கம் என்பது சுமார் 85% என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், விலைவாசியினை கட்டுக்குள் கொண்டு வரவும் , இலங்கையின் முனிசிபல் கவுன்சிலில் உள்ள நிலப்பகுதியில் அலங்கார செடிகள் அலங்கரித்த நிலையில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே இலங்கை அரசு இத்தகையை நடவடிக்கையை கையில் எடுக்க தொடங்கியது.
என்னென்ன காய்கறிகள்?
இலங்கையில் முனிசிபல் கவுன்சிலில் கத்தரி, செம்பருத்தி, பீட்ரூட், தக்காளி, நெட்டைபயறு, மிளகாய், கீரை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இது நகராட்சியில் வசிக்கும் 60% குறைந்தபட்ச வருமானம் உடைய மக்களுக்கு உணவளிக்க பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்சி முறையில் பயிர்
அதோடு பல பள்ளிகள் மற்றும் பின் தங்கிய மக்களுக்கும் உணவாக அளிக்கப்படுவதாகவும் , தற்போது மதிய உணவுக்காக ஐந்து பள்ளிகளுக்கு செல்வதாகவும் கொழும்பு மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பயிரிடப்படுவதாகவும், இதற்கு சில அதிகாரிகளையும் பொறுப்பாக நியமித்துள்ளதாக மேயர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீர்வு கிடைக்குமா?
இலங்கை பொருளாதார ரீதியில் பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தற்போதைய சூழலில் அவர்களுக்கு தேவை என்பது அத்தியாவசிய தேவைக்கு வேண்டிய பொருட்க்ளே. ஆக அரசு அதனை உணர்ந்து செயல்பட்டாலே மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.


Click it and Unblock the Notifications