இலங்கையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பெட்ரோல் நிரப்புவதற்காக 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது.
குறிப்பாக இலங்கையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 373 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக மணிக்கணக்கில் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் காத்திருக்கும் அவலமும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
பெண் ஆட்டோ டிரைவர்
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த தீப்தி என்ற பெண் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் இந்த வருமானத்தை வைத்துதான் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் மாதம் 50 ஆயிரம் இலங்கை ரூபாய் சம்பாதித்து வந்த அவருக்கு, இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் வெகுவாக குறைந்துள்ளது. இதனை அடுத்து அவரது வருமானம் தற்போது பாதிக்கும் குறைவாகவே உள்ளதாக கூறியுள்ளார்.
பெட்ரோல் நிலையம்
அதுமட்டுமின்றி பகலெல்லாம் ஆட்டோ ஓட்டி விட்டு, இரவில் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலுக்காக 10 முதல் 12 மணி நேரம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்தனை மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே தனக்கு எரிபொருள் கிடைக்கும் என்று அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீப்தி குடும்பம்
கொழும்பு புறநகரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் தற்போது தீப்தி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது தாய் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசிக்கும் அவர் தனது வருமானத்தை நம்பியே தனது குடும்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இரவில் காத்திருப்பு
பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருப்பது என்பது மிகவும் பயங்கரமான அனுபவம் என்றும், அதை சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்றும் சில நேரத்தில் இரவு முழுவதும் பாதுகாப்பு இல்லாமல் பெட்ரோலுக்காக பெட்ரோல் நிலையத்தில் காத்திருப்பது கொடுமையானது என்றும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா
இலங்கைக்கு அதிக வருவாய் தரும் ஒரே துறையான சுற்றுலாத் துறை கொரோனா பாதிப்புக்கு பின் மிகப்பெரிய அளவில் நலிந்து விட்டதால் முன்புபோல் ஆட்டோ ஓட்டுவதில் பெரிய வருமானம் கிடைப்பதில்லை என்றும், தனது வருமானம் மிகவும் குறைந்து விட்டதால் தங்களது குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தீப்தி கூறியுள்ளார்.
மீண்டு வருமா இலங்கை?
கடந்த வாரம் இலங்கையில் நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏதாவது நடவடிக்கைகளை எடுத்து, இலங்கையை மீட்டு கொண்டு வர வேண்டும் என்றும் தீப்தி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications