இலங்கையில் ஏற்கனவே பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள நிலையில் மேலும் ஒரு லட்சம் கோடி பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
எங்களுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை என்றும், ஒரு லட்சம் கோடி பணத்தை அச்சிடுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் இதனால் எதிர்வரும் மாதங்களில் 40 சதவீதம் பணவீக்கத்தை எட்டும் நிலைமை ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
தங்கமும் பணமும்
ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அடிப்படையில் தான் அந்நாட்டின் பணம் அச்சிட வேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் இதனை பின்பற்றுவதில்லை என பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட எடுத்திருக்கும் முடிவுக்கும் அந்நாட்டில் கைவசம் இருக்கும் தங்கத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என உலக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு லட்சம் கோடி கரன்ஸி
ஆனால் அதே நேரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிடும் முடிவை எடுத்துள்ள இலங்கை, அந்த பணத்தை உற்பத்திக்கு செலவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வேறு வழி இல்லை
இதுகுறித்து பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கூறியபோது, 'இலங்கையில் அச்சிடப்பட இருக்கும் பணம், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டால் அது வேறு விஷயம் என்றும், இப்போதுள்ள நெருக்கடியில் அரசாங்கத்திற்கு பணத்தை அச்சிடுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் கூறினார்.
சம்பளம் கொடுக்க முடியாது
இந்த நிலையில் பணத்தை அச்சிடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் செலுத்த முடியாது என்று கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஆனால் அதே நேரத்தில் அச்சிடும் பணத்தில் உற்பத்திக்கும் முன்னிலை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மீளுமா பொருளாதாரம்?
இலங்கையின் பொருளாதாரம் மீள முடியாத நிலையில் இருப்பதால் புதிதாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் ஒரு லட்சம் கோடி பணம் அச்சடிக்கும் முடிவால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரும் மாதங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.