மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா நியமிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.இ போர்டு உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் செபியின் ஒப்புதலுக்கு உட்பட்டு ஒருமனதாக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக பொது நல இயக்குநர் எஸ்.எஸ்.முந்த்ராவை நியமிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்இ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுபாஷ் ஷீயோரதன் என்ற எஸ்.எஸ்.முந்த்ரா, 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ஆர்பிஐ துணை கவர்னராக இருந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.
அதற்கு முன்னதாக பாங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குனர், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர், பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமை நிர்வாகி ஆகிய பொறுப்புகளை நிர்வகித்துள்ளார்.
OECD இன் நிதிக் கல்விக்கான சர்வதேச நெட்வொர்க்கின் (INFE) துணைத் தலைவராகவும் முந்த்ரா இருந்துள்ளார். ஜி20 மாநாட்டில் ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை வாரிய குழு தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
பூனா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான முந்த்ரா, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் & ஃபைனான்ஸ் (FIIB)-ல் சக உறுப்பினராக உள்ளார். அமிட்டி பல்கலைக்கழகம், முந்த்ராவுக்கு, வங்கித் துறை மற்றும் தொடர்புடைய துறைகளில் அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, டாக்டர் ஆஃப் பிலாசபி (டி.ஃபில்.), ஹானரிஸ் காசாவு பட்டம் வழங்கியுள்ளது.
முந்த்ராவுக்கு முன்னதாக நீதிபதி விக்ரமஜித் சென் மும்பை பங்குச்சந்தையின் தலைவராக இருந்தார். அவர் ஓய்வுபெற்றதை அடுத்து இந்த பதவிக்கு தலைவராக முந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.