படித்து முடித்துவிட்டு, நல்ல பெரிய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த 30 - 35 வருட வாழ்க்கை காலத்தை ஒட்டுவது எல்லாம் பழைய ஸ்டைல்.
இப்போது எல்லாம், படித்து முடித்தோமா, ஏதாவது நல்ல ஸ்டார்ட் அப் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அடுத்த 10 வருடத்தில் பில்லியனர் ஆகிவிட வேண்டும்.
இந்த எண்ணத்தில் தான் பல இந்திய இளைஞர்கள் இன்று படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சச்சின் பன்சால்.
சொத்து
இவர் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அதன் பின் நன்பருடன் சேர்ந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கினார். கடைசியில் தன் ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளை சுமார் 1 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு வெளியேறினார். இன்று இவரின் சொத்து மதிப்பு சுமாராக 1.2 பில்லியன் டாலர் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
ஸ்டார்ட் அப்
இந்தியாவில் சுமாராக 100-க்கு 80 ஸ்டார்ட் அப்கள் சில வருடங்களில் தடுமாறத் தொடங்கிவிடுகின்றன. பாக்கி 20 கம்பெனிகள் தான் ஓரளவுக்காவது தங்கள் வியாபாரத்தை ஒழுங்காகச் செய்யும். அதில் 5 கம்பெனிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிதாக எதையாவது சாதித்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது.
ரிஸ்க்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருக்கும் மிகப் பெரிய சவால்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம், பணி பாதுகாப்பின்மை, மிக அதிக அளவிலான அழுத்தம் (குறிப்பாக முதலீட்டாளர்களிடம் இருந்து வரும்) என பலவற்றையும் எதிர் கொள்ள வேண்டும். கொரோனா காலத்தில் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? வாருங்கள் ஒவ்வொரு கம்பெனியாக பார்ப்போம்.
சரமாரி லே ஆஃப்
ஆன்லைன் இன்சூரன்ஸ் கம்பெனியான Acko, சுமாராக 50 ஊழியர்களை தடாலடியாக லே ஆஃப் செய்து இருக்கிறார்களாம். MakeMyTrip, Cleartrip, Fab Hotels போன்ற ஸ்டார்ட் அப்கள் எல்லாம் கணிசமாக ஊழியர்களை லே ஆஃப் செய்து இருக்கிறார்களாம். Fareportal என்கிற அமெரிக்க ஸ்டார்ட் அப் கம்பெனி சுமார் 500 பேரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது.
சதக் சதக் சம்பளம் கட்
ஆன்லைன் இன்சூரன்ஸ் கம்பெனியான Acko-வின் உயர் அதிகாரிகள் 50 - 70 % சம்பள குறைவுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்களாம். MakeMyTrip மற்றும் அதன் துணை நிறுவனங்களான Goibibo, redBus நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் - நடு நிலை ஊழியர்கள் வரை சம்பள குறைப்பு நடக்கும் என நிறுவனர் தீப் கால்ரா சொல்லி இருக்கிறார்.
சமாளித்தல்
Exotel என்கிற ஸ்டார்ட் அப் கம்பெனி, அடுத்த 2 மாதங்களுக்கு, தன் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கொடுக்க இருக்கிறார்களாம். அதோடு ஊழியர்களை ஊக்குவிக்க, ஊழியர்களுக்கு (ESOP Employee Stock Option) கம்பெனியின் பங்குகளைக் கொடுக்கிறார்களாம். இதை Exotel நிறுவன சி இ ஓ-வே உறுதி செய்து இருக்கிறார்.
வாகன சேவைகள் கூட
Drivezy, Bounce போன்ற வாகன சேவை வழங்கும் கம்பெனிகள், லாக் டவுன் காலத்தில் தன் வியாபாரத்தை நடத்த முடியாததால் ஊழியர்களை லே ஆஃப் செய்து இருக்கிறார்களாம். Bounce கம்பெனி டிசம்பர் 2019-ல் தான் பொருளாதார மந்த நிலை காரணம் காட்டி ஊழியர்களை லே ஆஃப் செய்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ்
இப்படி ஸ்டார்ட் அப் பக்கம் எல்லாம் ரத்தம் தெறிக்க தெறிக்க லே ஆஃப் செய்து வருகிறார்கள். பற்றாக்குறைக்கு சம்பளத்தில் கை வைக்கிறார்கள். இன்னும் கொரோன வைரஸ், இந்த உலகத்தை விட்டு முழுமையாக போவதற்குள், எத்தனை பேரின் வாழ்க்கைக்கு உலை வைக்குமோ தெரியவில்லை. இப்படி எல்லோருக்கும் வேலை பறிபோனால் கொரோனா சரியான பிறகு யார் வேலை கொடுப்பார்கள்? எல்லாம் கொரோனாவுக்குத் தான் வெளிச்சம்.