இந்திய பொருளாதாரம் எனும் இயந்திரத்தில், புதிய ரத்தத்தைப் பாய்ச்சி, பல அடங்கு வேகமாகவும், வினோதமாகவும் ஓட வைத்த முக்கிய சக்திகளில் ஒன்று இந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகள்.
தெரு முனையில் இருக்கும் மளிகைக் கடையில் இருந்து சாமான்களை வாங்குவதற்கு எல்லாம் ஸ்டார்ட் அப் கம்பெனியா? என சில வருடங்களுக்கு முன் கேட்டு இருப்போம்.
ஆனால் இன்று கொரோனா காலத்தில் தெரு முனை இல்லை, நம் வீட்டு வாசல் கதவுகளைத் தாண்டி வெளியே போவதே சிக்கலான விஷயமாகிவிட்டது.
அடிப்படை தேவைகள்
இந்த கொரோனா வைரஸ் காலகட்டங்களில், ஸ்டார்ட் அப் கம்பெனிகள், பல தரப்பட்ட மக்களுக்குத் தேவையான, அடிப்படை வாழ்வாதரப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும் மிக முக்கிய வேலையைச் செய்து இருக்கிறார்கள். சரி ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் சம்பளக் கதைக்கு வருவோம்.
அதிரடி கட்
கொரோனா லாக் டவுனால், ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் கொஞ்சம் அதிக அளவில் லே ஆஃப், கட்டாய விடுப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் மறுப்பு எல்லாம் நடந்தது. அதை மறுப்பதற்கு இல்லை. ஓயோ, மிசோ, புக் மை ஷோ, ஸ்விக்கி, க்யூர் ஃபிட், ஓலா, உபர், சொமேட்டோ என பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளும், சரமாரியாக ஆயிரக் கணக்கான ஊழியர்களை லே ஆஃப் செய்தார்கள். ஆயிரக் கணக்கான ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பினார்கள்.
மீளும் வியாபாரம்
ஆனால் தற்போது, பல்வேறு ஸ்டார்ட் அப் கம்பெனிகளும், கொரோனா வைரஸ் லாக் டவுன் பீதியைத் தாண்டி, தங்கள் வியாபாரத்தைப் பார்க்க முடிகிறது. பல கம்பெனிகளும், மீண்டும் தங்கள் எதிர்காலத்தை பாசிட்டிவாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே ஊழியர்களுக்கும் மீண்டும் பழைய சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அது என்ன பழைய சம்பளம்
மார்ச் ஏப்ரல் மாத காலத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனையைக் காரணம் காட்டி சம்பளத்தைக் குறைத்திருப்பார்கள் இல்லையா? அந்த சம்பளக் குறைப்பை ரத்து செய்து, மீண்டும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் எவ்வளவு வாங்கிக் கொண்டு இருந்தார்களோ, அதே சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.
உறுதி செய்து இருக்கிறார்கள்
மளிகைக் சாமான்களை டெலிவரி செய்யும் குரோஃபர்ஸ் நிறுவனம், ஜூலை 01 முதல் பழைய சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம். அதே போல சொமேட்டோ CEO-வும் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கி இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். Ixigo நிறுவனமும் பழையசம்பளத்தைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.
சம்பள உயர்வு
பழைய சம்பளத்தைக் கொடுப்பது இருக்கட்டும், ஸ்னாப்டீலில் 700 ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு எல்லாம் கொடுக்க இருக்கிறார்களாம். இந்த சம்பள உயர்வு மார்ச் ஏப்ரல் மாதங்களில் வாங்கிக் கொண்டு இருந்த பழைய சம்பளத்தில் இருந்தா அல்லது சம்பளக் குறைப்புக்குப் பின் கொடுத்துக் கொண்டிருந்த சம்பளத்தில் இருந்தா என்று தான் தெளிவு படுத்தவில்லை. எப்படியோ சம்பள உயர்வு என்கிற சொல்லைக் கேட்கும் போதே நமக்கு ஒரு சந்தோஷம் வந்து விடுகிறது. ஊழியர்கள் நன்றாக இருந்தால் சரி தான்.
திடீர் நடவடிக்கைகள்
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திடுதிப்பென லே ஆஃப் செய்வது, கட்டாய விடுப்பு கொடுப்பது, சம்பளக் குறைப்பு என பல நடவடிக்கைகளில் அவசர அவசரமாக ஈடுபடாமல், கொஞ்சம் நிதானமாக யோசித்து, முடிவு செய்து இருந்தால் பலரின் வேலை தப்பித்து இருக்குமே என்கிற கேள்வியையும் இங்கு எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
முதல் முறை
"பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு இந்த பொருளாதார மந்த நிலை, முதல் முறையாக இருந்து இருக்கும். இந்த சூழலில் அவர்களின் ரியாக்ஷன் மிகவும் கடுமையானதாகவே இருந்தது" என்கிறார் Longhouse Consulting நிறுவனத்தின் நிர்வாக பார்ட்னர் அன்சுமான் தாஸ். இனி இப்படி ஒரு மந்த நிலை வந்தால் லே ஆஃப் என ஆயுதத்தை கையில் எடுக்காமல் கொஞ்சம் பொறுமையாக இருங்க ப்ரோஸ்!