இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவில் தான் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதை ஜிடிபி தொடங்கி விலை வாசி வரை பல தரவுகளும் உறுதி செய்து கொண்டு இருக்கின்றன.
அதோடு ஆர்பிஐ தொடங்கி சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் வரை இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு சுமாராக 5 சதவிகிதம் இருக்கலாம் என தங்கள் கணிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்றவைகளுக்கு மக்களும் வலுவாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, நம் சுப்ரமணியன் சுவாமி ஒரு அக்னி 5 ஏவுகணையையே ஏவி பாஜக கட்சியைத் தாக்கி இருக்கிறார்.
காரசார பேச்சு
கடந்த ஜனவரி 09, 2020, வியாழக்கிழமை அன்று, நம் சென்னை மாநகரத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஒருங்கிணைத்து நடத்திய 8-ம் ஆண்டு ThinkEdu என்கிற கூட்டத்தில் நம் சுப்ரமணியன் சுவாமியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வறுத்து எடுக்கத் தொடங்கினார்.
பொளேர் பொளேர்
"பொருளாதாரம் என்பது பரந்து விரிந்தது (Macro). ஒரு துறையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அது மற்றும் ஒரு துறையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஒரு பட்டம் பெற்றுக் கொண்டு இதை எல்லாம் கற்றுக் கொள்ள முடியாது" என வெளுத்து வாங்கி இருக்கிறார்.
ரகுராம் ராஜன்
தன் தாக்குதலின் அடுத்த பகுதியாக ரகுராம் ராஜனை துவம்சம் செய்து இருக்கிறார். "ரகுராம் ராஜன் அமெரிக்காவில் இருந்து வந்த மனநலம் சரி இல்லாத நபர். தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தியதால், வியாபாரிகளுக்கு தேவையான கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. எனவே சிறு குறு தொழில்கள் மூடத் தொடங்கிவிட்டார்கள்.
இதுவரை இல்லை
மேலும் தொடர்ந்து பேசிய சுப்ரமணியன் சுவாமி "என்னைப் பொறுத்தவரை, இதுவரை இந்தியாவில், ஒரு நல்ல நிதி அமைச்சர் நமக்குக் கிடைக்கவே இல்லை" என ஒரே போடாக காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சியையும் சேர்த்து ஒரண்டைக்கு இழுத்து இருக்கிறார். இதுவரை பிரனாப் முகர்ஜி, ப சிதம்பரம் போன்றவர்கள் வாய் திறக்கவில்லை.
மோடிக்கு ம்ஹீம்
தொடர்ந்து பேசிய சுப்ரமணியன் சுவாமி "பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் புரியாது. எனவே மோடி என்னை நிதி அமைச்சர் ஆக்க வேண்டும்" என போகிற போக்கில் பற்ற வைத்து இருக்கிறார். இத்தனை நாள் சூசகமாக நிர்மலா சீதாராமன் மற்றும் மோடியின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்துக் கொண்டு இருந்தவர் இப்போது நேரடியாக நிதி அமைச்சர் பதவி கேட்டு இருக்கிறார்.