சுப்ரமணியன் சுவாமி. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த சில அரசியல் வாதிகளில் ஒருவர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியலில் நல்ல திறன் படைத்தவர்.
அரசியலில் அவ்வப்போது பல புதிய விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லி இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்கச் செய்பவர்.
இப்படி பல விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கும் போது, கடந்த 2013-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, ராஜ்ய சபா உறுப்பினராக தற்போது இருக்கிறார். பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது ஒரு புதிய பகீர் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
விமர்சனம்
தன்னுடைய சொந்த கட்சியினரையே அவ்வப் போது வெளிப்படையாக விமர்சிப்பவர். பல முறை விமர்சித்தும் இருக்கிறார். சமீபத்தில் கூட, தன்னை நிதி அமைச்சர் ஆக்குங்கள் என்று கூட வெளிப்படையாக குரல் கொடுத்தவர் என்பதை எல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. சரி இப்போது என்ன சொல்லி இருக்கிறார்? இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.
எங்கு பேசினார்
கடந்த வியாழக்கிழமை (23 ஜூலை 2020) அன்று, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும், இந்திய அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு நடத்திய விர்ச்சுவல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணியன் சுவாமி, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும், இந்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு சரியும் என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
இந்தியப் பொருளாதாரம்
"கடந்த 4 - 5 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்திவிட்டது" எனச் சொல்லி இருக்கிறார். சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை உருவாக்கி இருக்கிறது எனலாம்.
பொருளாதார வளர்ச்சி
மேலும் பேசியவர் "இந்த பிரச்சனைகளால், இந்த 2020 - 21 நிதி ஆண்டில், இந்தியப் பொருளாதாரம் -6 முதல் -9 சதவிகிதம் வரை பொருளாதார வளர்ச்சி சரியலாம்" எனச் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார். 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.5 % சரியும் எனக் கணித்து இருக்கிறது ஐஎம்எஃப். ஃபிட்ச் ரேட்டிங் 5% சரியலாம் என்றது. கேர் ரேட்டிங்ஸ் 6.4 % சரியலாம் என்றது. ஆனால் சுப்ரமணியன் சுவாமி 6% - 9% சரியலாம் எனச் சொல்லி இருக்கிறார்.
வளர்ச்சி எப்படி
இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான கெப்பாசிட்டி இருக்கின்றன. லாபகரமாக உற்பத்தி செய்வது சாத்தியப்பட வேண்டும். அதோடு உற்பத்தி வேலைக்குத் தேவையான பணியாளர்கள் உற்பத்தி ஆலைகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாம் நடந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த பழைய கொள்கைகளைக் கடைபிடிக்காமல், சரியான கொள்கைகளைப் பின்பற்றினால், அடுத்த 2021 - 22 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகிதம் வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
பிரதமருக்கு கடிதம்
கடந்த 2015-ம் ஆண்டு, பிரதமருக்கு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரியும் என எழுதி இருந்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி சரிந்து கொண்டு இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன், பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறேன். அதில் இந்த ஆண்டின் இறுதியில் சூழ்நிலை எப்படி இருக்கும் என எழுதி இருக்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
டிமாண்டை அதிகரிக்காது
தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் டிமாண்ட் அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாயில், வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தான் கொரோனா லாக் டவுன் பிரச்சனையால் சரியும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க அறிவித்து இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக டிமாண்டை அதிகரிக்காது என நிதி தொகுப்புகளையும் விமர்சித்து இருக்கிறார் சுவாமி.
வால்மார்ட் சிக்கல்
வெறுமனே பொருளாதாரம் தொடர்பாக பேசியவர், வால்மார்ட் தொடர்பாகவும் பேசி இருக்கிறார். இந்தியாவில் வால்மார்ட் போன்ற கம்பெனிகளை ஊக்குவிப்பது, லட்சக் கணக்கான உள்நாட்டு சில்லறை வணிகர்களை பாதிக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு, இந்தியா, அமெரிக்கா மீது அழுத்தத்தைக் கொடுத்து, இந்திய விவசாய பொருட்களை, அமெரிக்கா இறக்குமதி செய்ய ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.