இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் என்றாலும் பலர் விவசாயம் செய்வதற்கு தயங்குகின்றனர். குறிப்பாக பட்டம் படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை.
இந்த நிலையில் எம்பிஏ பட்டதாரி ஒருவர் தான் பணிபுரிந்த வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.
அவர் தாய்லாந்து வகை கொய்யா விவசாயத்தை சாகுபடி செய்து ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தற்போது பார்ப்போம்.
இந்தியாவில் விவசாயம்
முன்பெல்லாம் படிக்காத பாமரர்கள் மட்டுமே விவசாயம் செய்வார்கள் என்றும் விவசாயத்தில் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வார்கள் என்றும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி வெற்றிகரமாக விவசாயத்தை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் என்ற இளைஞர் பிஎஸ்சி விவசாயம் படித்துவிட்டு அதன் பின் எம்பிஏ படித்து நல்ல வேலையில் இருந்தார். அதன் பின்னர் அவர் அந்த வேலையை உதறிவிட்டு விவசாயத்தை செய்து தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
விவசாயம் திட்டமிடப்படவில்லை
விவசாயத்தில் பி.எஸ்சி படித்துள்ள ராஜீவ் ஆரம்பத்தில் விவசாயத்தை ஒரு தொழிலாக மேற்கொள்ளும் எண்ணம் இல்லை. அந்த நேரத்தில் தொலைதூர கல்வி மூலம் எம்பிஏ முடித்தார். அந்த சமயத்தில் ராஜீவ் விதைகள் மற்றும் செடிகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டதால், அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இறுதியில், அவர் விவசாயத்தை தொடர முடிவு செய்தார்.
தாய்லாந்து கொய்யா
தாய்லாந்து வகை கொய்யாவைப் பற்றி ராஜீவ் அறிந்து கொண்டார். தனக்கு விவசாயம் கற்று தந்த விவசாயிகளுடனும் உரையாடி அதை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டார். இதனையடுத்து ராஜீவ் 2017ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் ஐந்து ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட தாய்லாந்து கொய்யாவை சாகுபடி செய்ய தொடங்கினார்.
ரூ.1 கோடி வருமானம்
30 வயதான விவசாய தொழிலதிபர் ராஜீவின் வணிகம் 5 ஏக்கரில் ஆரம்பித்து இன்று 25 ஏக்கர் நிலத்தில் விரிவடைந்துள்ளது. அதில் அவர் சுமார் 12,000 மரங்களை வளர்த்து வருகிறார். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதாவது மொத்தம் ரூ.1 கோடி அவரது தற்போதைய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேர விவசாயி
தனது வெற்றி குறித்து ராஜீவ் கூறுகையில், விவசாயம் செய்ய நினைத்தபோது, முதலில் வேலையை விட்டுவிடுவது குறித்து உறுதியாக முடிவெடுக்கவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு தாய்லாந்து கொய்யா விவசாயி ஒருவர், பஞ்ச்குலாவில் 5 ஏக்கர் கொய்யாத் தோட்டத்தை, அவரால் சரியாக பராமரிக்க முடியாததால், அதை எனக்கு கொடுக்க முன்வந்தார். இது எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே ஆண்டில், நான் எனது வேலையை விட்டுவிட்டு முழுநேர விவசாயியாக மாறினேன் என்று தெரிவித்தார்.
தாவரங்களுக்கு ஓய்வு
கொய்யா மரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யப்படும். மழைக்காலத்தில் ஒருமுறை, குளிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை. ஆனால் ராஜீவ் மற்ற விற்பனையாளர்களிடமிருந்து போட்டியை தவிர்க்க மழைக்காலத்தில் மட்டுமே அறுவடை செய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் தாவரங்களை ஓய்வெடுக்க அனுமதித்தாக தெரிவித்தார்.
கொய்யா விலை
டெல்லி ஏபிஎம்சி மார்க்கெட்டில் 10 கிலோ எடையுள்ள பெட்டிகளில் கொய்யாவை நிரப்பி ராஜீவ் விற்பனை செய்கிறார். ஒரு கிலோ சீசன் மற்றும் தரத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.100 வரை விலை போகும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.6 லட்சம் வருமானமும் மொத்தத்தில் ஒரு கோடியும் இவருக்கு வருமானம் கிடைக்கின்றது.