சன் டிவி நெட்வொர்க் பங்குகள் கடந்த இரண்டு நாட்களில் பெரும் சரிவை கண்டு 52 வாரங்களில் இல்லாத அளவு சரிந்தது.
வியாழக்கிழமை சந்தை சேர முடிவில், மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் சுமார் 1.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.402.55க்கு என்ற விலையில் வர்த்தகமாகி இருந்தது.
சன் டிவி நெட்வொர்க் பங்குகள் கடந்த 2 நாட்களில் மட்டும் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய நிலவரம்
கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்த சனி டிவி பங்குகள், வெள்ளிக்கிழமை காலை 1.33 சதவீதம் என 5.50 புள்ளிகள் அதிகரித்து 417.85 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
சன் டிவி நெட்வொர்க்
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றாக சன் டிவி நெட்வொர்க்கின் ஐதராபாத் அணி உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் கிடைத்த தொகையில் மிகப்பெரிய தொகை ஐதராபாத் அணிக்கும் கிடைக்கும் என்பது இந்நிறுவனத்தின் பாசிட்டிவ் செய்திகளில் ஒன்று. இருப்பினும் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
6 மொழிகள்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம் என ஆறு மொழிகளில் சன் டிவி தொலைக்காட்சி, எஃப்எம் வானொலி ஆகியவற்றை நடத்தி வருகிறது.
பங்குகள் வீழ்ச்சி
அனைத்து மொழிகளிலும் சன் டிவி நெட்வொர்க்கிற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஆறு மாதங்களாக சன் டிவி நெட்வொர்க் பங்குகள் சரிந்து வருகின்றன என்றும் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் கடந்த ஆண்டும் 24 சதவீதம் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ஊடகம்
சன் டிவி நெட்வொர்க் என்பது சென்னையில் அமைந்துள்ள ஊடக நிறுவனமாகும். சன் குழுமத்தின் பகுதியான இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் கலாநிதி மாறன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளையும் ரேடியோ அலைவரிசைகளையும் பல்வேறு மொழிகளில் நிர்வகித்து வருகிறது.