சென்னை: இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மெல்ல தலை தூக்கத் தொடங்கிவிட்டன. இனி பொருளாதார மந்த நிலை எல்லாம் ஒன்றும் கிடையாது. டாப் கியரில் தட்டித் தூக்க வேண்டியது தான் என்கிற ரீதியில் மத்திய அரசு பேசி வருகிறது. அதற்கு தகுந்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஆனால் எதார்த்தத்தில் நிலைமை மாறிவிட்டதா..? என்றால், இல்லை என்பது தான் பதிலாக வருகிறது. அதோடு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையும் பெரிய அளவில் மீண்டு வந்ததாகத் தெரியவில்லை.
இப்போது கூட, சந்தை நிலவரங்கள் அத்தனை நன்றாக இல்லாததால், சென்னையைச் சேர்ந்த ஆட்டொமொபைல் நிறுவனம், சில நாட்களுக்கு தங்கள் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறார்கள்.
நிறுவனம்
சுந்தரம் க்ளேடன் என்கிற நிறுவனத்தை பலரும் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இது தமிழக தொழில் நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் குழும நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் வணிக வாகனங்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான aluminum pressure die castings-களை உற்பத்தி செய்து வருகிறார்கள்.
வேலை இல்லா நாட்கள்
இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 28, 2019, இன்று (டிசம்பர் 30) மற்றும் நாளை(டிசம்பர் 31) ஆகிய தேதிகளை வேலை இல்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள். காரணம் கேட்டால் "பொருளாதார மந்த நிலையினால் வியாபாரம் மந்தமாக இருக்கிறது" எனவே உற்பத்தியை மூன்று நாட்களுக்கு வேலையை நிறுத்த இருப்பதாக பங்குச் சந்தைகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
கடந்த காலம்
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும், பல திட்டமிட்ட வேலை இல்லா நாட்களை சுந்தரம் க்ளேடன் கம்பெனியே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில், சுந்தரம் க்ளேடனின் சென்னை உற்பத்தி ஆலையில் சுமார் 5 வேலை இல்லா நாட்களும், ஓசூர் உற்பத்தி ஆலையில் சுமார் 3 வேலை நாட்களும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நான்காவது முறை
2019-ன் கடந்த நான்கு மாதங்களில், பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த அக்டோபர் 01, 2019 அன்று தான் சுந்தரம் க்ளேடன் நிறுவனம், திட்டமிட்டு வேலை இல்லா நாளை அறிவித்தது. இப்படி திட்டமிட்ட வேலை இல்லா நாட்களை அறிவிப்பது, சுந்தரம் க்ளேடன் நிறுவனத்துக்கு, இந்த 4 மாதங்களில் இது நான்காம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நிறுவனங்கள்
கடந்த சில மாதங்களில், மாருதி சுசூகி தொடங்கி மஹிந்திரா, டொயோட்டா, அசோக் லேலண்ட், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பாஸ்ச் (Bosch) போன்ற ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்கள், வேலை இல்லா நாட்களை அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.