கார்ப்பரேட் உரையாடல் ஒன்றில் வட இந்திய இளைஞர்கள் இந்தியில் பேசியதை அடுத்து அவருக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழ் பெண் குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் என்று இன்னும் பலர் அறியாமையில் இருக்கும் இளைஞர்களுக்கு கொடுத்த சரியான பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் பணிபுரியும் ஹேமா சங்கர் என்பவர் தனது உரையாடல் அனுபவத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கேள்வி-பதில் உரையாடல்
கார்ப்பரேட் நிறுவனத்தின் கேள்வி-பதில் உரையாடலில் இரண்டு வட இந்திய இளைஞர்களிடம் இருந்து உரையாடல் தொடங்கியது. ஒரு இளைஞர் உரையாடலை இந்தியில் தொடங்கியபோது, எனக்கு ஹிந்தி தெரியாது, உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா? என்று கேட்டேன்.
இந்தி தெரிந்தால் தான் இந்தியரா?
அதற்கு அந்த இளைஞர்களில் ஒருவர் 'நீங்கள் இந்தியர் தானே பிறகு எப்படி இந்தி புரியாமல் இருக்க முடியும்? என்று பதிலளித்தார். அருகிலிருந்த இன்னொரு இளைஞர் அவர் ஒருவேளை தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கிண்டலுடன் கூறினார்.
இந்தி அவசியமா?
இதனையடுத்து அந்த தமிழ் இளைஞர்களிடம், 'நான் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருக்கும்போது இந்தி எனக்கு அவசியமில்லை. உங்களைப் போன்ற நபர்களுடன் பேசும் போது தான் இது போன்ற எரிச்சலூட்டும் கேள்விகள் எழுகின்றன என்று கூறினேன். மேலும் நான் உங்களுக்கு எங்களது முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை கூறிய கதை ஒன்றை கூறுகிறேன் என்று அந்த கதையை கூறினேன்.
சி.என்.அண்ணாதுரையின் கதை
ஒரு மனிதன் இரண்டு நாய்கள் வைத்திருந்தார். ஒன்று பெரிய நாய், இன்னொன்று சிறிய நாய். அந்த நாய்களை வீட்டில் இருந்து வெளியே செல்வதற்காக தனியாக இரண்டு கதவுகளை அவர் தயார் செய்தார். பெரிய நாய்க்குட்டிக்கு பெரிய கதவும், சின்ன நாய்க்குட்டிக்கு சின்ன கதவும் அவர் செய்து வைத்திருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை முட்டாள் என கேலி செய்தனர். பெரிய கதவிலேயே சின்ன நாயும் செல்லலாமே? பின் எதற்காக இவர் சிறிய கதவை வைக்க வேண்டும் என்று கேட்டனர்.
ஆங்கிலம் இருக்க இந்தி ஏன்?
அதேபோல்தான் உங்களுடைய வாதமும் இருக்கின்றன. உலகம் முழுவதும் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்றுத் தருகிறார்கள். அவ்வாறு இருக்க இந்தியாவில் உள்ள ஒரு பகுதி மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டும் ஏன் இந்தி மொழியை நான் கற்க வேண்டும்.
தமிழ் பெண்ணின் பதிலடி
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்கும் போது இந்தியாவில் உள்ள அனைவருமே ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தலாமே? பெரிய கதவாக ஆங்கிலம் இருக்கும்போது இந்தி என்ற சின்ன கதவு எதற்கு? என்று கூறினேன். என்னுடைய பேச்சை கேட்டு இரு இளைஞர்களும் அமைதியாக இருந்தனர்' என்று ஹேமா சங்கர் பதிவு செய்திருந்தார். இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே இந்தியர் என்று ஒருசில வட இந்தியர்கள் பேசி வரும் திமிர் பேச்சுக்கு தமிழ் பெண் ஒருவர் பதிலடி கொடுத்த சம்பவம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.