தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 100ஆவது நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. பொதுப் பட்ஜெட் அறிக்கையைப் போலவே விவசாயப் பட்ஜெட் அறிக்கையும் சட்டசபையில் டிஜிட்டல் பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களை தொடர்ந்து 3வதாக தமிழ்நாட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான பட்ஜெட் அறிக்கையை இத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் முக்கியமான அம்சங்கள் என்ன, வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
விவாசயிகளுக்கு சமர்ப்பணம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டினை காணிக்கையாக்குகிறேன் என கூறி பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம். நேற்று தமிழகத்தின் முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில் முதல் காகிதமில்லா பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது. அதனை போலவே இன்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் வேளாண்மை துறைக்கு ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு கடந்த 2011 - 2026 வரையில் 23,960.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 2016 - 2021 வரையில் 35,588 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் 2020 - 21ம் நிதியாண்டில் மட்டும் 11,982.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இன்னும் கூடுதல் தொகையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
வேளாண் உழவர் நலத்துறை
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தவிர, வேளாண் வணிகர்களையும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையினரை பெருமிதப்படுத்தும் விதமாக வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உணவின்றி உயிர்வாழ இயலாது
இன்றைய காலக்கட்டத்தில் நாகரீகம் பலமடங்கு வளர்ந்தாலும், உணவின்றி உயிர்வாழ இயலாது என வேளாண் பட்ஜெட்டில், விவசாயத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்துள்ளார் பன்னீர்செல்வம்.
வேளாண் பட்ஜெட் என்பது தொலை நோக்கு திட்டமாகும். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவதால், விவசாய நிலப்பரப்பின் அளவு குறைந்து வருகின்றது. ஆக இந்த விவசாய நிலபரப்பினை 75% ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
சிறப்பு கவனம்
இயற்கை விவசாய வேளாண் பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், இயற்கை வேளாண்மைக்கு என ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் என்பது நடப்பு ஆண்டு முதல் தொடங்கப்படும். இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண் உரங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
இயற்கை விவசாயிகள் சன்றிதல்
இயற்கை விவசாயிகள் பட்டியலை எடுத்து, அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழும் வழங்கப்படும்.
பண்டைய தமிழகர்களின் பாரம்பரிய தொழிலாளான பனை உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பனை விதைகள் மற்றும் பனை விதைப்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்
கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டம் மூலம் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதலை அதிகப்படுத்தவும், சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க ஊக்குவிக்கப்படும். இது தவிர கால் நடை விவசாயிகளை ஊக்குவித்து பால் உற்பத்தியினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும் வழிவகை செய்யப்படும். இதற்கான சந்தைகளை ஊக்கப்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தினை செயல்படுத்த 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம்
இன்றைய இளம் தலைமுறையினருக்கு கணினி போன்ற தொழில் நுட்பங்களை தெரிந்த அளவுக்கு, விவசாயம் பற்றி அறிந்திருக்கவில்லை. இதனால் விவசாயத்தில் ஈடுபாடு என்பது வெகுவாக குறைந்துள்ளது. இதனை மாற்றவும், விவசாயத்தினை ஊக்கப்படுத்தவும் ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மரபுசார் நெல் ரகங்கள்
இன்று உலகம் முழுக்க இந்தியாவின் மரபுசார் நெல் ரகங்களுக்கு பெரும் வரவேற்புண்டு. ஆனால் இந்தியாவில் இது சிறிது சிறிதாக பழைய மரபுகள் மறக்கப்பட்டு மாற்றம் கண்டு வருகின்றது. ஆக மரபுசார் நெல் ரகங்களை ஊக்குவிக்கும் விதமாக இன்றைய பட்ஜெட்டில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க
இந்த பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக இயற்கை வேளாண்மை அமைப்பு செயல்படும்.
மேலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விதைப் பண்னைகளில் சுமார் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளை மேலும் வளர்ச்சி காண வைக்க முடியும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை
கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இது தவிர மானவரி விவசாயிகளுக்கு ஊக்கத்தினை அளிக்கும் வகையில், மானாவரி நிலங்களில் மரக்கன்றுகளை வளர்க்க நிதியுதவி அளிக்கப்படும். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பயறு வகைகளை மதிய உணவுத் திட்டத்தில் மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயறு கொள்முதல் அதிகரிக்கலாம் என அரசு திட்டமிடுவது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
நெல் உற்பத்தியினை அதிகரிக்க திட்டம்
தமிழக அரசு நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தியினை அதிகரிக்க சன்ன ரகத்திற்கு 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவுன்ம், சாதாரண ரகத்திற்கு 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2,060 ரூபாய்க்கும், சாதாரண ரக நெல் 2,015 ரூபாய்க்கும் கொடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு தார்பாய்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை, விளைவித்த நெல்லை சரியான முறையில் பாதுகாக்க முடிவதில்லை. மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை தடுக்க அறுவடைக்கு பிறகு இழப்புகளை தவிர்க்க 52.02 கோடி ரூபாயில் விவ்சாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை விவசாயத்திற்கு
தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தஞ்சாவூரில் தென்னை மதிப்பு கூட்டு மையம் தொடங்கப்படும். இதே பருத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பருத்தி இயக்கத்திற்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என இன்றைய வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு தனி அருங்காட்சியகம்
பல துறைகளுக்கு அருங்காட்சியகம் இருந்தாலும், வேளாண்மை துறைக்கு என தனியாக இல்லை. ஆக விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மை துறைக்கு தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இது இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தினை பற்றி தெரிந்து கொள்ள முக்கிய அம்சமாக இருக்கும். இதற்காக சென்னையில் அமைக்கபட விருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் அரவை இயந்திரம், பாரம்பரியமிக்க நெல் ரகங்கள், பாரம்பரிய கால் நடைகளின் புகைப்படங்கள், உள்ளூர் பயிர் ரகங்கள், வேளாண்மை துறை சம்பந்தமான இயந்திரங்கள் உள்ளிட்ட பலவும் காட்சிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை ஊக்குவிக்கும்
இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களை அரசு கெளரவிக்கும்.
குறிப்பாக பாரம்பரிய உற்பத்தி முறையினை கையாண்டு உற்பத்தியினை அதிகரிக்கும் விவசாயிகளை சிறப்பிக்கும்.
புதிய விவசாயம் சம்பந்தமான இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளையும் அரசு ஊக்குவிக்கும்.
விவசாய துறைக்கு ஒதுக்கீடு
50 உழவர் சந்தைகளின் தரத்தினை ஆய்வு செய்து மேம்படுத்த 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளுக்கு வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
குறிப்பாக விவசாயிகளின் நல்ன கருதி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இன்று பெரியளவில் உதவிகரமாக இருக்கும் இலசவ மின்சாரத்தினை வழங்க 4,508 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சோலார் பம்புசெட்டுகளை உருவாக்க 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டகலை பூங்காக்கள்
ஏற்கனவே டைட்டல் பார்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கடலூர் மற்றும் வடலூரில் 1 கோடி ரூபாய் செலவில் தோட்டகலைப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
இதே நகர்புறங்களில் 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் மாடிதோட்ட தளைகள் வழங்கப்படும். ஊரகப்பகுதிகளில் 2 விதைகள் அடங்கிய 2 லட்சம் தளைகள் வழங்கப்படும்.
இதேபோல காய்கறி, கீரை சாகுபடியை அதிகரிக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
இதேபோல் பழ உற்பத்தியினை அதிகரிக்க விதைப்பண்ணை மூலம் பலவகை செடிகள் வழங்கப்படும். பண்ருட்டியில் 5 கோடி ரூபாய் செலவில் பலாப் பயிர் மையம் அமைக்கப்படும்.
100% மானியத்தில் பண்ணைக் குட்டைகள்
இது தவிர 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 1,700 நீர் சேமிப்பு கட்டமைப்புகள் 5 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்படும்.
நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்க 23.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் சந்தை மேம்பாடு
தமிழகத்தில் உழவர் சந்தைகள் மூலம் தினசரி 2000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் சுமார் 8000 விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உழவர் சந்தைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன நகரங்களில் புதிய உழவர் சந்தைகள்
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சியில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவரங்கள் டிஜிட்டல் பலகைகளில் அறிவிக்க வழிவகை செய்யப்படும். முதல் கட்டமாக வரத்து அதிகளமுள்ள 50 உழவர் சந்தைகள், 50 விற்பனை கூடங்களில் இந்த செயல்முறையானது செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுகளை உரமாக்கும் திட்டம்
உழவர் சந்தைகளில் வீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் 2.75 கோடி ரூபாயில் கட்டமைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீணாகும் காய்கறிகளை வீணாக குப்பைகளில் வீசி எறியாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் உரங்களாக மாறும். இதனால் சுற்று சூழலும் மேம்படும். உரமும் தயாரிக்க முடியும். மொத்தத்தில் இது வரவேற்க தக்க நல்ல விஷயம்.
மிளகு பதப்படுத்தும் மையம்
கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, விளை பொருட்களை சேமிக்க ஒட்டன் சத்திரம், பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
உலர் களங்கள் திட்டம்
15 மாவட்டங்களில் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான உலர் கலங்கள் அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் கிராம சந்தை 2 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்படும்.
சென்னை கொளத்தூரில் நவீன காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்படும். இதன் மூலம் நுகர்வோருக்கு நியாமான முறையில் காய்கறிகள் கிடைக்கும். விவசாயிகளும் நியாயமான விலையை இதன் மூலம் பெற முடியும்.
புவிசார் குறியீட்டுக்கு முயற்சி
கொல்லிமலையில் விளையும் மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி, போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு பெற அரசு முயற்சி செய்யும்.
சென்னை, சேலம், திருப்பூர், திருச்சி, கோவையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் பரிசீலித்து பின்னர் தொடங்கப்படும்.
புதிய தோட்டக்கலை கல்லூரி
கோயமுத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை படிப்பினை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்படும் எனவும் அறிக்கவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் ஆராய்ச்சி மையம்
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மையம் தொடங்கப்படும்.
மஞ்சள் மாநகரான ஈரோட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் எனவும் அறிக்கவிக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் வேளாண்மை ஆராய்ச்சி மையம்
பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில், நம்மாழ்வார் வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மையில் தொழில் முனைவோராக ஈர்க்க தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வளத்துறைக்கு என்ன?
மீன் வளத்துறையினை ஊக்குவிக்கும் விதமாக மீன் விற்பனை அங்காடிகளுக்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்துதல், கால் நடை மற்றும் நாட்டுகோழி இனப்பெருக்க பண்ணைக்கு 27.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இதே அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 7.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 மணி நேரங்களாக அறிவிக்கப்பட்டு வந்த இந்த பட்ஜெட் உரையில் வேளாண் மற்றும் சார்ந்த துறைகளுக்கு மொத்தம் 34,220 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.