தமிழக சட்டசபையின் 16வது சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
பல முக்கிய அம்சங்கள் இந்த உரையில் இடம்பெற்றிருந்தாலும், இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது, பொருளாதார மந்த நிலையை போக்கும் வகையில், அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக கூறியது தான்.
அதிலும் இந்த ஆலோசனை குழுவில் பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து வரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜியின் மனைவி எஸ்தர், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை பெற்றவர். இப்படி பல பொருளாதார வல்லுனர்கள் இந்த குழுவில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொருளாதார ஆலோசனைக் குழு
இந்த சிறந்த வல்லுனர்கள் குழுவானது பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த சிறப்புக் குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜியின் மனைவியும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டாஃப்லோ, அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ் நாரயணன் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
மோடி அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள்
இவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் பொருளாதார ரீதியிலான ஆலோசனை வழங்குவார்கள். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கும் சில நிபுணர்கள், இந்த ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ளது தான். எப்படி இருப்பினும் இந்த ஆலோசனை குழுவில் உள்ள ஒவ்வொரு பொருளாதார ஆலோசகர்களும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முக்கிய பங்கு வகிக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.
வறுமை ஒழிப்பு
குறிப்பாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜியின் மனைவி, வறுமை ஒழிப்பு கொள்கைகலை உருவாக்கியமைக்காக நோபல் பரிசு பெற்றவர். இவரும் இந்த சிறப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பெற உள்ளார். இவரின் பங்கு தமிழகத்தின் வறுமையை ஒழிக்க முக்கிய பங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவுக்கு முக்கிய காரணங்கள்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன், இந்தியா பொருளாதாரத்தினை பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர், ஏற்கனவே நலிந்து வரும் இந்தியா பொருளாதாரம் பற்றி பலமுறை எச்சரித்தவர். நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் இந்திய பொருளாதாரத்தில் முதுகெலும்பை உடைத்ததாகவும் தோன்றுகிறது, ஏனெனில் இந்திய பொருளாதாரம் பலவீனமான நிலையில் தான் இந்த நடவடிக்கைகள் வந்ததாகவும் ரகுராம் ராஜன் ஒர் உரையில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
யார் இந்த அர்விந்த் சுப்ரமணியன்
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம் பெற்றிருந்த, 16-வது பொருளாதார ஆலோசகர் தான் அரவிந்த் சுப்பிரமணியன். அரசின் பல பொருளாதார சம்பந்தமான ஆலோசனைகளை ஏற்கனவே வழங்கி வந்தவர். இப்படி பல வல்லுனர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு குழு அமைக்கிறது என்பது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் விரைவில் பொருளாதார சரிவில் இருந்து மீண்டும் வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து வரும் தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள் சொல்வோமே.


Click it and Unblock the Notifications