தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சுமார் 18 நிறுவனங்களுடன் சுமார் 19,955 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 26,509 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தமிழக அரசு நம்புகிறது.
தமிழ்நாடு அரசு தற்போது செய்துள்ள ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை நிறுவனமான கிரவுன் குரூப் ஆப் கம்பெனி, ஓலா எலக்டிரிக் மற்றும் மஹிந்திரா CIE ஆகிய முன்னணி நிறுவனங்கள் உட்பட 18 நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது.
18 நிறுவனங்கள் உடனான இந்த முதலீட்டு மற்றும் வர்த்தகம் ஒப்பந்தம் அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது.
முக்கிய நிறுவனங்களின் முதலீடுகள்
தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ள 18 நிறுவனங்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2,354 கோடி ரூபாயும், டோரென்ட் கேஸ் 5000 கோடி ரூபாயும், பர்ஸ்ட் சோலார் 4,875 கோடி ரூபாயும், எஸ்எஸ்ஈஎம் நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயும், கிரவுன் குரூப் 2,500 கோடி ரூபாயும், டாடா குழுமத்தின் வோல்டாஸ் குரூப் 1,001 கோடி ரூபாயும், மைலேன் நிறுவனம் 350 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு பிற மாநிலங்களை விடவும் கொரோனா காலத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டில் பிற மாநிலங்களை விடவும் முன்னோடியாக உள்ளது.
இதன் தற்போது தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது 19,955 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் சுமார் 26,509 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக்
தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தகப் பிரிவாக விளங்கும் ஆட்டோமொபைல் துறையில் புதிதாக ஒரு நிறுவனம் தனது உற்பத்தி தளத்தைத் தமிழ்நாட்டில் அமைக்க முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் டாக்ஸி வர்த்தக துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஓலே நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஆம்ஸ்டர்டம் நகரை தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் Etergo என்னும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தைக் கைப்பற்றியது.
உற்பத்தி ஆலை
இந்நிலையில் ஓலா - Etergo நிறுவன கூட்டணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் புதிதாக 2,354 கோடி ரூபாய் முதலீடிட்லி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலை மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் இறங்க உள்ளது ஓலா.
இந்தத் தொழிற்சாலையில் சுமார் 2,182 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும் என ஓலா தெரிவித்துள்ளது.
கிரவுன் குரூப்
இதேபோல் ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமான கிரவுன் குரூப் தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் கிளஸ்டர் பார்க் அமைக்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் விமானங்களுக்குச் சேவையான உபகரணங்கள், சப் சிஸ்டம்ஸ் மற்றும் டிரோன் ஆகியவற்றைச் சேலம் மாவட்டத்தில் தயாரிக்க உள்ளது.
கிரவுன் குரூப் இதற்காகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்து சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது.
டோரென்ட் கேஸ்
இந்நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
பர்ஸ்ட் சோலார்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பர்ஸ்ட் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்திற்காகச் சுமார் 4,185 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டி
Society for Smart Electric Mobility (SSEM) என்னும் நிறுவனம் திருப்பூர் மாவட்டத்தில் தத்தனூர் பகுதியில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புத் தளம் மற்றும் பியூச்சர் மொபிலிட்டி பார்க்-ஐ சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.
அதானி குரூப்
இதேபோல் அதானி குரூப் சென்னை சிறுசேரியில் டேட்டா சென்டரை அமைக்கச் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்யத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.