இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி அளவிட்டுப் பட்டியலில் டாப் 3 இடத்தில் இருந்த தமிழ்நாடு, தனிநபர் வருமானத்தில் டாப் 18 மாநிலத்தில் மகாராஷ்டிராவை முந்தியும், குஜராத் மாநிலத்திற்கும் அடுத்ததாகவும் இருந்த தமிழ்நாடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா..?
வியக்கவைக்கும் ரம்மியமான வரலாற்றைத் தமிழ்நாடு வைத்திருந்தாலும், தற்போதைய நிலையில் தமிழ்நாட்டின் எதிர்காலப் போட்டித்திறன் எப்படி இருக்கிறது..?!
17 வருட வளர்ச்சிப் பாதை
சிறந்த வர்த்தக வளர்ச்சி, 18 பெரிய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானத்தை விடவும் அதிகம் கொண்ட 7 மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் மாநில ஜிடிபி வளர்ச்சியில் கடந்த 17 வருடத்தில் நடந்துள்ள மாற்றங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
8 முக்கிய மாநிலங்கள்
ஆந்திர பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியும் இந்திய வளர்ச்சியும் எப்படி இருக்கிறது என முதலில் பார்ப்போம். இந்த 17 வருட காலத்தை இரண்டு பகுதியாகப் பிரிப்போம் 2005-2012, 2012-2019.
2005-2012 ஜிஎஸ்டிபி
இக்காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 7.4 சதவீதம்
குஜராத் - 9.9 சதவீதம்
ஹரியானா - 9.2 சதவீதம்
கர்நாடகா - 7.9 சதவீதம்
கேரளா - 7.8 சதவீதம்
மகாராஷ்டிரா - 9.4 சதவீதம்
தமிழ்நாடு - 10.3 சதவீதம்
தெலுங்கானா - 11.3 சதவீதம்
2012-2019 ஜிஎஸ்டிபி
இக்காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.0 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 7.4 சதவீதம்
குஜராத் - 9.8 சதவீதம்
ஹரியானா - 8.6 சதவீதம்
கர்நாடகா - 9.3 சதவீதம்
கேரளா - 6.3 சதவீதம்
மகாராஷ்டிரா - 6.9 சதவீதம்
தமிழ்நாடு - 7.1 சதவீதம்
தெலுங்கானா - 8.0 சதவீதம்
தமிழ்நாட்டின் ஜிடிபி
இந்த இரண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் -1.3 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் ஜிடிபி அளவீடு 3.2 சதவீதம் சரிந்துள்ளது, கிட்டதட்ட 3 மடங்கு அதிகமான சரிவை அடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கானா -3.4 சதவீத சரிவை அடைந்துள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இதுகுறித்து தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டரில், நான் எம்எல்ஏ-வாக இருந்த போதில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து குறைந்து வருகிறது எனக் கூறி வருகிறேன். அதை நிரூபித்துள்ள இந்தத் தரவுகள் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ஜெயலலிதா வழக்கு
இதேபோல் 2014ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் பொருளாதார அளவீடு இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கும். அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு முன்பும், பின்பும்.
தமிழ்நாடு மோசம்
2005-2012, 2012-2019 ஆகிய இரண்டு காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விடவும் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தேர்வு செய்யப்பட்ட டாப் 8 மாநிலத்தில் கடைசி 2வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு (மெட்ராஸ்)
இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு தமிழ்நாடு (மெட்ராஸ்) பிற மாநிலங்களைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே வளர்ச்சி அடைந்து வந்தது. 1967 வரையில் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த மெட்ராஸ், அதன் பின்பு நீதிகட்சி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.
2 கோடி தமிழர்கள்
இந்தியாவில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2 கோடி மக்கள் உலகம் முழுவதும் வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
அனைத்துத் துறை வளர்ச்சி
தமிழ்நாட்டில் ஒருபக்கம் விவசாயம், தொழிற்துறை, கல்வி, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களுக்கு அதிகளவிலான வாய்ப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், போக்குவரத்து, என அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சி அடைந்து அனைவருக்குமான மாநிலமாக உருவெடுத்தது.
கடந்த 10 ஆண்டுகள்
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்ததை விடவும் மோசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சரிவில் இருந்து எப்படித் தமிழ்நாடு மீண்டு வரப்போகிறது. தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருமா..?!