இந்தியாவின் CSIR என்று கூறப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனராக தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த கலைசெல்வி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கவிருக்கும் கலைசெல்விக்கு தமிழக முதல்வர் உள்பட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி பெண்
காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மையத்தின் இயக்குனராக இருப்பவர் கலைச்செல்வி. இவர் லித்தியம் அயன் பேட்டரி துறையில் பல ஆண்டுகள் பணி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CSIR இயக்குனர்
இந்த நிலையில் CSIR அமைப்பின் இயக்குநராக இருந்த சேகர் என்பவர் ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து CSIR இயக்குனர் பதவிக்கு தற்போது கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியில் இரண்டு ஆண்டுகள் இருப்பார் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சியின் செயலாளர் பொறுப்பையும் இவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைசெல்வியின் படிப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் தான் இவரது சொந்த ஊர். இங்கு உள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த கலைசெல்வி, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை காந்திமதி அம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.
லித்தியம் பேட்டரிகள்
கலைசெல்வியின் ஆராய்ச்சியில் லித்தியம் மற்றும் லித்தியம் பேட்டரிகள், சூப்பர் கேபாசிட்டர்கள், கழிவுகளால் இயக்கப்படும் மின்முனைகள், ஆற்றல் சேமிப்பு மற்றும் எலக்ட்ரோகேடலிடிக் பயன்பாடுகளுக்கான எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை முக்கியமானதாகும்.
25 ஆண்டுகள் அனுபவம்
CSIR மையத்தில் தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உள்ளார் என்பதும் 6 தற்காப்பு உரிமைகளும் பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான CSIR-இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற பொறுப்பை ஏற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த கலைசெல்விக்கு எனது வாழ்த்துக்கள் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.