கொரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதே சமயம் கடன் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இதற்கு ஒரு வகையில் கொரோனா தான் காரணம் என்றாலும், கொரோனா மட்டுமே காரணம் அல்ல, கொரோனாவுக்கு முன்பே பொருளாதாரம் சரியத் தொடங்கிவிட்டதாக வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.
தற்போது மூன்றாம் அலையின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், பொருளாதார எழுச்சிக்கும் சேர்ந்து போராடும் நிலையில் தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கலானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பலத்த எதிர்பார்ப்பு
அதிலும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, அதனை தக்கவைத்து கொள்ள, பற்பல நல்ல அறிவிப்புகளையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றது. நிதி நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில் எப்படி இதனை சமாளிக்க போகிறது. இந்த பட்ஜெட்டில் சாமனியர்களுக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றது, போன்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில் பல மாதங்களாக தயாராகி வந்த பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை 2.0
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தல் அறிக்கையில் கூறியது போலவே வேளான் பட்ஜெட் நாளை தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது.
தற்போது சென்னை பசுமை சென்னையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். போஸ்டர்கள் இல்லா நகரமாக மாற்றப்படும். இதற்காக சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வேலை நாட்கள் அதிகரிப்பு
ஊரக வேலை வாய்ப்பு நாட்களை 100 நாளிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி, சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் அளவில் கொரோனா கால கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காக
கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அண்ணா மறுமலர்ச்சி இயக்கம் மீண்டும் தொடங்கப்படும்.
நீர் நிலை புணரமைப்புகளுக்கு 610 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இது உலக வங்கியின் உதவியுடன் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நீர்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 6,607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலங்கள் மீட்கப்படும்
அரசுக்கு சொந்தமான 2.05 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது, இந்த நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.
நிலம் கையகப்படுத்தல் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். அதற்கான இழப்பீடும் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
ஏழை எளிய மக்களுக்கு வீடு
இதன் மூலம் 2021-22-ல் 8,017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதே போன்று கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கும் 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு 3,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
மொத்தம் 5 ஆண்டுகளில் எத்தனை வீடுகள்
கிராமங்களில் 8,03,924 ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும். இதன் மூலம் 10 ஆண்டுகளில் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு ஒன்றினை அரசு கொடுத்துள்ளது.
ரேஷன் கடைகள் தேவை எங்கு?
ரேஷன் கடைகள் தேவையுள்ள இடங்களை கண்டுபிடிக்கவும், அரசு அதற்காக நடவடிக்கையுமெடுக்க தனிக்குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு 8,437.57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இன்னும் ஏழைய எளிய மக்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கும், பொருட்கள் இல்லை என்று கூறாமல் தடையற்று சென்று வாங்கவும் வழிவகுக்கும்.
மருத்துவ திட்டம்
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கியுள்ள மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டத்திற்கு 257.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யடும். இதே போன்று மருத்துவ உபகரணங்கள் வாங்க 741.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு 116.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 18,933 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு
அடிப்படை கல்வி அறிவு மற்றும் கணித அறிவை மேம்படுத்த 66.70 கோடி ரூபாய் செலவும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ஏற்படுத்தப்படும். குறிப்பாக பள்ளிகல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 32,599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார துறை சார்ந்த அறிவிப்பு
வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டு மின்சார மானியத்துக்காக 19,872.77 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மின் மிகை மா நிலம் என்பது தவறு. ஏனெனில் 2,500 மெகாவாட் மின்சாரம் வெளிசந்தையில் இருந்து தான் வாங்கப்படுகிறது.
இதனை தவிர்க்க அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 17,909 கோடி ரூபாய் மின்சார உற்பத்தி சேர்ப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சித்தா பல்கலைக் கழக திட்டம்
சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தா பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
பழனி தண்டாயுதபானி கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். இதன் மூலம் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலங்கள் மீட்பு
இதுவரை தமிழக அரசால் 626 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்கள் மீட்க மீட்கப்பட்டுள்ளன.
100 கோவில்களில் 100 கோடி செலவில் குளம் மற்றும் தேர் சீரமைக்கப்படும்.
12,955 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்திற்காக 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெட்ரோல் மீதான வரி குறைப்பு
இன்றைய பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பெட்ரோல் மீதான வரி குறைப்பு பார்க்கப்படுகிறது. இது லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக்கத்தில் பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கும் கீழாக குறைய வாய்ப்புள்ளது. இது சாமனியர்களுக்கு மிக நல்லதொரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நெருக்கடியான கொரோனா காலக்கட்டத்தில் வேலையினை இழந்து தவித்து வந்த மக்களுக்கு, மிக ஆறுதலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மேற்கொண்டு பணப்புழக்கத்தினை ஊக்கப்படுத்தும்.
குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை
பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித் தொகையாக வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகின்றது. ஆனால் இந்த தொகையானது குடும்ப அட்டைகளில் பெண்கள் தலைவராக இருந்தால் மட்டுமே கிடைக்கும் என புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது தவறான செய்தி. இதற்காக யாரும் குடும்ப தலைவரின் பேரினை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். வாக்குறுதி கொடுத்தது போல 1,000 ரூபாய் கொடுக்கப்படும்.
எதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
அங்கன்வாடி நிலையங்களின் தரத்தின உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி நிதி ஒதுக்கீடு.
எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு 1,725.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
குழந்தைகள் வளர்ச்சி பணி திட்டத்திற்கு 2,536.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மசூதிகள, தேவாலயங்களை மேம்படுத்த 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆதி திராவிடர் பழங்குடியினர் திட்டத்திற்காக 14,969 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கலை அமைக்க 123.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இளைஞர்கள் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு 225.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
முனைவர் பட்ட கல்வித் உதவித் தொகைக்காக 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இலவச பள்ளி சீருடைகள் வழங்குவதற்காக 409.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
வேலை வாய்ப்பு திறனை வளர்க்க பயிற்சிக்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மகளின் கல்வி முன்னேற்றத்தினை ஊக்குவிக்க 762.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதே மூன்றாம் பாலினத்தவர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அம்சமான புதிய திட்டங்கள்
சென்னை நந்தம்பாக்கத்தில் 165 கோடி ரூபாய் செலவில் புதிய நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து நெய்வேலியில் தொழில் நுட்ப தொழில்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
இது தவிர காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கபப்டும்.
விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான் கு நகரங்களில் புதொய்ய டைட்டல் பார்க் அமைக்கப்படும்.
இதே கோயமுத்தூரில் 225 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே தேனி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிய தொழிற் பேட்டைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளுக்கு தனி ஆலோசனைக் குழு
பல்வேறு வரி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், வரியை மா நில அரசுக்கு பிரித்து கொடுப்பதில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகின்றது. இதனால் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளுக்கும் தனி ஆலோசனைக் குழு நிறுவப்படும்.
இதே போல அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிதி நிலைமையை தெரிந்து கொள்ள, தகவல்களை திரட்ட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மொத்த பட்ஜெட் நிலவரம்
அரசின் நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் செலவினம் 2,61,188.78 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை என்பது 92,529.43 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை
போக்குவரத்து துறையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய பேருந்துகளை வாங்க 623.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் படி 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயண அறிவிப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில, அதற்காக போக்குவரத்து துறைக்கு டீசல் மானியமாக 750 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆய்வு செய்யப்படும்.
இதேபோல அடுத்த 4 ஆண்டுகளில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.