சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் இரண்டாவது விமான நிலையம் மற்றும் தற்போதுள்ள விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை தமிழகத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு புதிய முதலீடுகளையும் கொண்டு வரும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பன்னூரில் இரண்டாவது விமான நிலையம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, தூத்துக்குடி, கோயம்புத்தூர் விமான நிலையங்களின் விரிவாக்கத் திட்டம் பற்றித் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதோடு தமிழ்நாடு அரசால் புதிதாக அமைக்கப்படும் விமானப் பயிற்சி பள்ளி குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார்.
மதுரை மற்றும் தூத்துக்குடி
மதுரை மற்றும் தூத்துக்குடியில் விமான நிலைய விரிவாக்கத்திற்காகத் தமிழக அரசு சொந்தமாக நிலம் கையகப்படுத்தி வருகிறது. அதிகப்படியான நிறுவனங்கள் தற்போது தென் தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புவதால், தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்களில் அதிகக் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். மேலும் இரவு தரையிறங்கும் வசதிகளையும் விரிவாக்கப்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாகத் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காகச் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் 256.35 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் சுமார் 288.55 ஹெக்டேர் நிலம் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோவையில் ₹2,000 கோடி செலவில் 260.65 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
விமான ஓடுதளங்கள்
தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது என ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.
தங்கம் தென்னரசு
அதற்குத் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை AAI அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய விமானப் படை
கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்எல்சியிடம் உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கியத் திட்டமாகக் கையில் எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கோவில்பட்டி விமான ஓடுதளம்
கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவ தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ (TIDCO) அதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.
சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்
ஒரு நல்ல விமான நிலையம் முதலீட்டாளர்கள் மத்தியில் முதல் தாக்கத்தை ஏற்படுத்தும். சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் மூலம் தமிழ்நாடு சரியான பாதையில் செல்கிறது, இது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும் என்று தங்கம் தென்னரசு இப்பேட்டியில் கூறியுள்ளார்.