இந்தியா முழுவதும் இருக்கும் FMCG நிறுவனங்கள் இந்த லாக்டவுன் மற்றும் கொரோனா காலத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்தும் வருகின்றது.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி FMCG நிறுவனமான கவின்கேர் லிமிடெட் தனது வர்த்தகம் மற்றும் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் 2.0 திட்டத்தைத் திங்கட்கிழமை வெளியிட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் வருவாய் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது கவின்கேர் நிறுவனம்.
கவின்கேர் குழுமம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் கவின்கேர் நிறுவனம் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் மட்டும் அல்லாமல் கூல்டிரிங்ஸ், பர்சனல் பியூட்டி பொருட்கள், சலூன், விலங்குகளுக்கான மருத்துவமனை எனப் பல துறையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் 2.0 திட்டத்தில் வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பல திட்டங்களை வகுத்துள்ளது கவின்கேர் குழுமம்.
ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் சேவை
இத்திட்டத்தின் மூலம் நிறுவனத்திலும், வர்த்தகத்திலும் பல புதுமைகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல துறையில் ஈகாமர்ஸ், ஆன்லைன் சேவை துறையில் இறங்கவும் முடிவு செய்துள்ளதாகக் கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஓ வெளியிடத் திட்டமா..?
இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வரும் நிலையில், நிறுவனத்திலும், நிர்வாகத்திலும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. தற்போது கவின்கேர் நிறுவனம் செய்யப்போகும் மாற்றங்கள் அனைத்தும் ஐபிஓ வெளியிடுவதற்காகத் தானே என்ற கேள்விக்குக் கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் பதில் தெரிவித்துள்ளார்.
ரூ.5000 கோடி வருவாய் இலக்கு
கவின்கேர் நிறுவனம் எளிதான முறையில் வர்த்தகச் சந்தையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்த மறுசீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த 3 வருடத்திற்குள் கவின்கேர் நிறுவனம் வருடத்திற்கு 5000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறும் நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்த 2.0 மறுசீரமைப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஐபிஓ வெளியிட தற்போது எவ்விதமான திட்டமும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் சி.கே.ரங்கநாதன்.
2.0 மறுசீரமைப்புத் திட்டம்
இந்த 2.0 மறுசீரமைப்பு திட்டத்திற்காகச் சி.கே.ரங்கநாதன் தலைமையிலான கவின்கேர் நிர்வாகம் புதிதாக 800 முதல் 900 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டு உள்ளார். இந்த முதலீட்டின் மூலம் தொழிற்சாலை, விநியோக நெட்வொர்க், விரிவாக்கம், டிஜிட்டல் கட்டமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த முதலீடு செய்யப்பட உள்ளது.
900 கோடி ரூபாய் முதலீடு
இதுமட்டும் அல்லாமல் கவின்கேர் குழுமத்தின் கீழ் இருக்கும் Green Trends, Limelite Salon ஆகியவற்றில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது கவின்கேர் நிறுவனம். இதேபோல் டைய்ரி பிரிவில் 400 கோடி ரூபாயும், SANCHU மருத்துவமனைகள் எண்ணிக்கையை அடுத்த 3 வருடத்தில் 100ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகச் சி.கே.ரங்கநாதன் பதில் அளித்துள்ளார்.
வருவாய் வளர்ச்சி
கடந்த வருடம் 1,700 கோடி ரூபாய் அளவிலான வருடாந்திர வருமானத்தைப் பெற்ற கவின்கேர் குழுமம், இப்புதிய மறுசீரமைப்பு மற்றும் புதிய முதலீடுகள் மூலம் அடுத்த 3 வருடத்திற்குள் இக்குழுமத்தின் வருமானம் 5000 கோடி ரூபாய் வரையில் உயர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
முக்கியத் தலைவர்கள்
கவின்கேர் குழுமத்திற்குச் சேர்மன்-ஆகச் சி.கே.ரங்கநாதன் இருக்கும் நிலையில், நிறுவனத்தின் டைரெக்டராக இருக்கும் வெங்கடேஷ் விஜயராகவன் FMCG பிரிவின் சிஇஓ-வாக இருப்பார், புதிய துவக்கங்கள் பிரிவுக்குத் தலைவர் மற்றும் சிஇஓ-வாக அமுதவல்லி ரங்கநாதனும், ரீடைல் பிரிவுக்கு மனுரஞ்சித் ரங்கநாதன் தலைவர் மற்றும் சிஇஓ-வாக இருப்பார்.