தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொற்றின் வேகம், அடுத்து எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் யாருக்கு என்ன பாதிப்பு.
இரவு நேர ஊரடங்கு
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதோடு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை
செவ்வாய்க்கிழமை மட்டும் சென்னையில் சுமார் 1489 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தொற்று பரவல் டெல்லியைப் போல் மோசமாகும் முன்பு நடவடிக்கையை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், பல பிரச்சனைகளையும் அளிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரீடைல் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, குறிப்பாக நுகர்வோர் சார்ந்த சாலையோர வியாபாரிகள், சிறு கடைகள் ஆகியவற்றின் வர்த்தகமும் பாதிக்கப்படும்.
போக்குவரத்துத் துறை
மேலும் விடுமுறை நாட்களில் பொதுவாகவே போக்குவரத்துத் துறை மிகவும் பிசியாக இருக்கும் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள், வாகன ஒட்டிகளின் வருமானம் பாதிக்கப்படும்.
ஆன்லைன் வர்த்தகம்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமாக அதிகமாக இருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், டெலிவரி செய்வோரின் வருமானமும் பாதிக்கும். மேலும் பொழுதுபோக்கு சார்ந்த அனைத்து பிரிவுகளும் இந்த லாக்டவுன் மூலம் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஈகாமர்ஸ் டெலிவரியும் தாமதம் ஆகும்.
பொழுதுபோக்குப் பிரிவு
தியேட்டர், பார், பப், விளையாட்டு மைதானம், மால், போன்ற அனைத்து பொழுதுபோக்கு பிரிவுகளும் வார நாட்களை விடவும் வார இறுதி நாட்களில் தான் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். தற்போது அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பொழுதுபோக்கு துறையைக் கடுமையாகப் பாதிக்கும்.
கல்லூரி தேர்வுகள்
தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜனவரியில் நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு குறைந்த பின்னர் நேரடியாகத் தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சனிக்கிழமை சிறப்பு வேக்சின் முகாம்
மேலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவில்
வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை. திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. இது மட்டும் அல்லாமல் பள்ளி மற்றும் கோவில்களுக்கு வார நாட்களில் கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உடன் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனச் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை
கொரோனா பரவலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு study holiday விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கெனச் சிறப்பு வேக்சின் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு லாக்டவுன்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு குறையவில்லை எனில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. டெல்லியில் நேற்று 5481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையல் இன்று தொற்று எண்ணிக்கை 10000 தாண்டும் எனக் கூறப்படுகிறது.