இந்தியாவில் பொருளாதார ரீதியாகவும், சமூக நீதி, சமத்துவம் போன்ற விஷயங்களிலும் முன்னேறி இருக்கும் மாநிலங்கள் என்றால், அதில் தமிழகத்துக்கு என்று நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு.
அப்படிப்பட்ட தமிழகம், கொரோனா வைரஸ் என்கிற கொடுமையான விஷயத்தால், எல்லா மாநிலங்களைப் போல பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தொழில் வளம் அதிகம் என்பதால், கொஞ்சம் கூடுதலாகவே பாதிக்கப்பட்டது.
இந்த இடர்பாட்டுக்கு மத்தியிலும், தமிழகம் ஒரு பெரிய விஷயத்தைச் சாதித்து இருப்பதாக இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
ஐடி ஏற்றுமதி
கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல்வேறு ஐடி கம்பெனிகளும், வீட்டில் இருந்தே செயல்படத் தொடங்கின. ஐடி கம்பெனி ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து, ஏசி சேரில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வீட்டிலேயே உட்கார்ந்து வேலை பார்க்கத் தொடங்கினார்கள். கொரோன வைரஸ் பிரச்சனை தொடங்கிய காலத்தில், சில பல ஐடி கம்பெனிகளில் இருந்து ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இன்னும் சில கம்பெனிகளில் சம்பளம் குறைக்கப்பட்டது.
25000 கோடி ரூபாய்
அதை எல்லாம் தாண்டி, பணியில் இருந்த 90 % ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும், கடந்த 6 மாதங்களில், தமிழகத்தில் இருந்து மட்டும் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக Software Technology Parks of India-வின் இயக்குநர் சஞ்ஜய் தியாகி சொல்லி இருக்கிறார்.
கடந்த ஆண்டை விட அதிகம்
கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், தமிழகம் செய்த ஐடி மென்பொருள் ஏற்றுமதியை விட, இந்த முறை செய்த (25,000 கோடி ரூபாய்) ஏற்றுமதி அதிகம் என மொட்டையாகச் சொல்லி இருக்கிறார் சஞ்ஜய் தியாகி. முந்தைய ஆண்டில், இதே 6 மாதங்களில் செய்த ஏற்றுமதி தரவுகளைச் சொல்லவில்லை.
பிரதமரின் 5 ட்ரில்லியன் டாலர்
பிரதமர் நரேந்திர மோடியின் 5 ட்ரில்லியன் டாலர் கனவை நனவாக்க, தமிழகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியாவின் ஜிடிபி 5 ட்ரில்லியன் டாலரைத் தொட, தமிழகம் 500 பில்லியன் டாலராவது பங்களிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் Software Technology Parks of India இயக்குநர்.