இந்தியாவில் விமான உற்பத்தியில் முன்னோடியாகச் சில நிறுவனங்கள் இருந்தாலும், இந்திய ராணுவமும், மத்திய அரசும் தொடர்ந்து HAL நிறுவனத்திடம் இருந்து தான் விமானங்களை வாங்கி வருகிறது, இல்லையெனில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக விமானத்தை வாங்குகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய விமான உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மோனோபோலியாக வர்த்தகம் செய்து வந்த HAL-ன் ஆதிக்கத்தை டாடா உடைத்துள்ளது.
விமான உற்பத்தித் துறை
இந்தியாவில் விமான உற்பத்தித் துறையில் டாடா - ஏர்பஸ் கூட்டணி ஒரு முக்கியத் திட்டத்திற்காக இணைந்தது. இக்கூட்டணி பெரிய அளவிலான ஆர்டர்கள் எதுவும் எடுக்காத நிலையில், தற்போது பாதுகாப்புத் துறை சார்ந்த நாடாளுமன்ற அமைப்பு இந்திய ராணுவத்திற்குத் தேவையான புதிய போக்குவரத்து விமானத்தை டாடா - ஏர்பஸ் கூட்டணி நிறுவனத்திடம் இருந்து வாங்க உள்ளது.
டாடா - ஏர்பஸ் கூட்டணி
இந்தியாவில் முதல் முறையாக விமான ஆர்டரை தனியார் இந்திய நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய விமான உற்பத்தி துறையில் புதிதாக 6,600 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி டாடா - ஏர்பஸ் கூட்டணி மூலம் இந்தியாவில் விமான உற்பத்திக்கான கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி வர உள்ளது.
C295MW ரக ராணுவ போக்குவரத்து விமானம்
2012 முதல் மத்திய அரசு 56 C295MW ரக ராணுவ போக்குவரத்து விமானத்தை வாங்கத் திட்டமிட்டு வரும் நிலையில், மத்திய அரசு தற்போது இறுதியான முடிவை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் ஏர்பஸ் டபென்ஸ் நிறுவனத்தில் இருந்து 16 விமானத்தை நேரடியாக வாங்கவும், மீதமுள்ள 40 விமானங்களை டாடா ஏர்பஸ் கூட்டணியில் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
56 C295MW விமான
2021ல் இந்த 56 விமானத்தை வாங்க 11,900 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 2015 ஏப்ரல் மாதம் கடலோர பாதுகாப்புத் துறை முக்கிய மாற்றங்களைச் சேர்த்ததோடு, மீண்டும் புதிதாக ஆலோசனை துவங்கப்பட்டது. மேக் இன் இந்தியா மூலம் இந்தத் திட்டத்தைத் தனியாருக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில் ஏர்பஸ் மட்டுமே முன் வந்தது.
9 வருட திட்டம்
சுமார் 9 வருடத்திற்குப் பின்பு மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் 2012ல் நிர்ணயம் செய்யப்பட்ட அளவான 11,900 கோடி ரூபாய் மதிப்பீடு தற்போது 15,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டாடா - ஏர்பஸ் கூட்டணி இத்திட்டத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய ராணுவத்திற்கான விமானம் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டத்தையும் வைத்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு வர்த்தகம்
இந்தத் திட்டத்தின் மூலம் டாடா குழுமம் மட்டும் அல்லாமல் குறைந்தது 3 சப்ளையர்கள் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி மட்டும் அல்லாமல் மெயின்டனென்ஸ், இதர பணிகளையும் செய்ய உள்ள காரணத்தால் அடுத்த 30 வருடத்திற்கு நிலையான வர்த்தகத்தை இக்கூட்டணி பெற உள்ளது.