சீனாவுக்குப் போட்டியாக இந்தியா உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நாடாக மாற வேண்டும் என்பதற்காக இத்துறையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வர்த்தகத் துறையில் இந்தியாவின் டாடா குழுமம் நுழைந்தது.
ஆரம்பமே அசத்தலான திட்டத்தில் ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிப்புத் திட்டத்தைப் பெற்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல திட்டமிட்ட டாடா குழுமம் பெங்களூரில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்திரான் கார்ப் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையை வாங்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் கப்பெனப் பிடித்துக்கொண்டது டாடா குழுமம்.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் 3 முக்கியச் சப்ளையாளர்களான விஸ்திரா, பாக்ஸ்கான், பெகாட்ரன் ஆகிய மூன்றும் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
விஸ்திரான்
இதில் விஸ்திரான் பெங்களூருக்கு அருகில் தொழிற்சாலை அமைத்து இயங்கி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சம்பளம் குறித்த பிரச்சனையின் போது தொழிற்சாலை சூறையாடப்பட்டது.
பெங்களூர் தொழிற்சாலை
இதன் பின்பு பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்த விஸ்திரான் பெங்களூர் தொழிற்சாலையில் தனது பங்கீட்டை முழுமையாக விற்பனை செய்யத் திட்டமிட டாடா இதைக் கைப்பற்ற முடிவு செய்தது.
பேச்சுவார்த்தை
இதற்காக டாடா பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மாதக்கணக்கில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விஸ்திரான் தொழிற்சாலையின் பெரும் பங்கீட்டை பெற்று உற்பத்தி முதல் நிர்வாகம் வரையில் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மார்ச் 31க்குள்
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், மார்ச் 31க்குள் விஸ்திரான்-ஐ கைப்பற்றும் பணிகளை டாடா முடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் டிசிஎஸ் சிஓஓ கணபதி சுப்ரமணியன் டாடா குரூப் தென்னிந்தியாவில் இருக்கும் ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையைக் கைப்பற்ற உள்ளதாகத் தெரிவித்தார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப்
இதன் மூலம் இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப் ஆக மாற்ற வேண்டும் என அரசின் பயணத்தில் டாடா குழுமம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானியங்கள்
பெங்களூரில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் விஸ்திரான் பங்கீட்டை டாடா எலக்ட்ரானிக்ஸ் மார்ச் 31 க்குள் கைப்பற்றுவதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மத்திய அரசின் மானியங்கள் அனைத்தும் டாடா பெறும்.
விஸ்திரான் திட்டம்
ஐபோன் உற்பத்தியில் மார்ஜின் அளவு மிகவும் குறைவாகக் கிடைக்கும் காரணத்தால் தனது வர்த்தகத்தைச் சர்வர் போன்ற பிற துறைகளில் திருப்ப திட்டமிட்ட விஸ்திரான் 2020ல் சீனாவில் இருக்கும் ஐபோன் உற்பத்தி தளம் மற்றும் வர்த்தகத்தைத் தனது போட்டி நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
பாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரன்
இதைத் தொடர்ந்து விஸ்திரான் இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியில் இருந்து விலகும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இதே வேளையில் இந்தியாவில் பாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரன் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்த வருகிறது.
பெங்களூர் விஸ்திரான்
பெங்களூர் நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் விஸ்திரான் 2.2 மில்லியன் சதுர அடி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தக் கையகப்படுத்தல் முடிந்தால், டாடா குழுமம் விஸ்திரான் நிறுவனத்திடம் இருக்கும் எட்டு ஐபோன் உற்பத்தி லைன்களையும் கைப்பற்றும்.
10000 ஊழியர்கள்
விஸ்திரான் தொழிற்சாலையில் 2000 இன்ஜினியர்களும், தொழிற்சாலையில் 10,000 தொழிலாளர்களை டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்துடனான டாடா-வின் வணிகக் கூட்டணி பெரிய அளவில் அதிகரிக்கும்.
டாடா ஓசூர் தொழிற்சாலை
பெங்களூருக்கு அருகிலுள்ள ஓசூரில் டாடா குழுமம் அதன் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையில் பணியமர்த்தும் பணிகளைச் சமீபத்தில் தான் வேகப்படுத்தியது. இந்த ஓசூர் தொழிற்சாலை பல நூறு ஏக்கரில் அமைந்துள்ளது.
உதிரிப்பாகங்கள், உற்பத்தி
இந்த ஓசூர் தொழிற்சாலையில் ஐபோன் உதிரிப்பாகங்கள் மட்டும் அல்லாமல் வரும் ஆண்டுகளில் ஐபோன் உற்பத்தி லைன்களையும் டாடா அமைக்க வாய்ப்புகள் தற்போது அதிகமாக உள்ளது.
100 ஆப்பிள் ஸ்டோர்
இதேவேளையில் டாடா நிறுவனம் இந்தியா முழுவதும் 100 ஆப்பிள் ஸ்டோர்களைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. அதில் முதலாவது ஸ்டோர் இந்தக் காலாண்டில் மும்பையில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டாடா ஐபோன் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் இருந்து விற்பனை வரையில் நிர்வாகம் செய்யப்போகிறது.