தமிழ்நாட்டில் கடந்த 5 வருடத்தில் சிறப்பான வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகளை கொண்டிருக்கும் மாவட்டமாக மாறியுள்ள கோயம்புத்தூர் பக்கம் டாடா குழுமத்தின் பார்வை திரும்பியுள்ளது. டாடா குழுமம் தனது அனைத்து துறை வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில் டாடா குழுமத்தின் பார்வை கோயம்புத்தூர் பக்கம் திரும்பியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் உற்பத்தி முதல் சேவை துறை வரையில் பல துறைகளில் இயங்கி வரும் வேளையில் கோயம்புத்தூரில் டாடா குழுமம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பது தான் தற்போது தொழில்துறையினர் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
டாடா குழுமம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது ஐபோன் தொழிற்சாலை இருக்கும் பகுதிக்கு அருகிலேயே செமிகண்டக்டர் சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) பணிகளை செய்ய புதிய தொழிற்சாலை அமைக்க நிலத்தை தேடி வருவதாக தகவல் வெளியானது.
இதேவேளையில் டாடா குழுமம் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் நிலத்தை தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த இடம் எதற்காக தேடப்படுகிறது என்பது தெரியவில்லை.
ஆனால் செமிகண்டக்டர் சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) தொழிற்சாலை நிறுவனத்திற்கு சப்போர்ட் செய்யும் தொழிற்சாலை அமைக்கவோ அல்லது பெங்களூரில் வாங்கப்படும் WISTRON ஐபோன் தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்களை கூடுதலாக தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்குமா அல்லது சென்னையில் சிறுசேரி-யில் இருக்கும் பிரம்மாண்ட டிசிஎஸ் அலுவலகத்தை போல் கோயம்புத்தூரிலும் அமைக்க வாய்ப்புள்ளது.
டாடா குழுமத்தில் கோயும்புத்தூரில் உற்பத்திக்காக இடத்தை தேடினால் அதிகப்படியான வாய்ப்பு ஐபோன் உதிரிபாகங்களுக்காக தான் இருக்கும். இதேபோல் சேவைத்துறைக்காக தேடினால் டிசிஎஸ் அலுவலகத்திற்காக இருக்கலாம். சமீபத்தில் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கோயம்புத்தூர்-க்கு வரும் வேளையில் டிசிஎஸ் தனது அடுத்த தளத்தை இந்த மாவட்டத்தில் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.
டாடா குழுமம் தனது வர்த்தகத்தை முக்கியமான பகுதியை தற்போது தமிழ்நாட்டிலும், பிற தென்னிந்திய மாநிலங்களிலும் அமைத்து வருகிறது. சென்னையில் உற்பத்தி நிறுத்தப்பட்ட போர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலையும் டாடா மோட்டார்ஸ் வாங்குவதாக ஆரம்பக்கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
டாடா குழுமம் கோயம்புத்தூரில் நிலம் தேடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதுக்குறித்து அறிந்தவர்கள் எக்னாமிக் டைம்ஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.