உலகம் முழுவதும் கம்பியூட்டர் சிப் தட்டுப்பாடு பல உற்பத்தி சந்தைகளையும், நிறுவனங்களைப் பாதித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் சிப், ஹெட்போன், மானிடர் போன்ற பல கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் பயன்படுத்தும் சிப்-க்குத் தற்போது மிகப்பெரிய அளவிலான தட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்கவும், இந்தத் தட்டுப்பாட்டை வர்த்தகமாக மாற்ற முடிவு செய்துள்ளது டாடா குரூப். ஆம் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழும நிர்வாகம் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் இறங்கவும் புதிய நிறுவனத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
செமிகண்டக்டர் உற்பத்தியில் டாடா குரூப்
செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் இறங்குவது குறித்தும், இதற்காகப் புதிய நிறுவனத்தை உருவாக்குவது குறித்தும் சந்திரசேகரன் பேசுகையில் டாடா குரூப் புதிதாகத் துவங்கிய அனைத்து வர்த்தகத்திலும் முன்னோடியாக உள்ளது.
புதிய வர்த்தகத்தில் முன்னோடி
உதாரணமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள் ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியிலும் டாடா முன்னோடியாக உயரும் எனத் தெரிவித்துள்ளார்.
குளோபல் சப்ளை செயின்
தற்போது குளோபல் சப்ளை செயின் பிரிவில் தற்போது உலக நாடுகள் சீனாவை மட்டுமே நம்பியிருக்கிறது, ஆனால் கொரோனாவுக்குப் பின்பு உருவாகும் வர்த்தகச் சந்தையில் இந்த நிலை முற்றிலும் மாற உள்ளது. பெருமளவிலான வர்த்தகம் சீனாவை விட்டுப் பிற நாடுகளுக்கு மாற்றும் நிலை உருவாகும் எனச் சந்திரசேகரன் IMC வருடாந்திர வர்த்தகக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியாவுக்குப் பெரிய வாய்ப்பு
குளோபல் சப்ளை செயின் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரும் இந்த வேளையில் இந்தியா இதில் பெரிய அளவில் நன்மை அடைய வாய்ப்புகள் உள்ளது. டாடா குரூப் ஏற்கனவே இந்தியாவில் ஹெய் டெக் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
1 டிரில்லியன் டாலர் ஜிடிபி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மூலம் நாட்டின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலர் வரையில் உயர்வது மட்டும் அல்லாமல் பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சிப் தட்டுப்பாட்டு
இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிப் தட்டுப்பாட்டுக் காரணமாக உற்பத்தி தடைபெற்று வர்த்தகம் பாதிக்கப்பட்ட போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதில் பாதிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் டாடா குரூப் செமிகண்டக்டர் உற்பத்தியில் இறங்க முடிவு செய்தது எனச் சந்திரசேகரன் கூறினார்.
செமிகண்டக்டர் உற்பத்தியும்.. இந்தியாவும்...
செமிகண்டக்டர் ஆட்டோமொபைல் உற்பத்தியில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது எரிபொருள் அளவு சென்சார், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் முதல் நேவிகேஷன் சிஸ்டம் வரையில் பல இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் செமிகண்டக்டர் உற்பத்தி செய்ய அதிகளவிலான முதலீடுகள் தேவை, இதேவேளையில் இந்தியாவில் இத்துறையில் ஒரு நிறுவனம் கூட இல்லை.
அனில் அகர்வால் வேதாந்தா குரூப்
சமீபத்தில் வேதாந்தா குரூப் வீடியோகான் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் முதன்மையாக இருக்கும் நிலையில், வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தியில் இறக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் ஒரு நிறுவனம் கூட இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
டாடா குரூப் செமிகண்டக்டர் உற்பத்தி
டாடா குரூப் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதன் மூலம் ஆரம்பத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா பவர் ஆகிய நிறுவனங்களுக்கும், அதன் பின்பு கிடைக்கும் வர்த்தகத்திற்கு ஏற்ப உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் டாடா குரூப் உள்ளது.
முதலீட்டுக்கு மோசம் இல்லை
இதுமட்டும் அல்லாலா டாடா குழுமத்திடம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் இருக்கும் காரணத்தால் முதலீட்டுக்கு மோசம் இல்லை என்பதால் செமிகண்டக்டர் உற்பத்தியில் நம்பியுடன் இறங்குகிறது டாடா குரூப்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் பிரச்சனை
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் சிப் தட்டுப்பாடு காரணமாகக் கார் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கார்களைப் புக் செய்துள்ளவர்களுக்குக் குறித்த நாளில் டெலிவரி செய்ய முடியாத காரணத்தால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான வர்த்தகச் சரிவு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இதேபோல் இந்தியாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்திலும் இதே பிரச்சனை தான். இந்தியாவின் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் பிராண்டுகளிலும் டாப் வேரியன்ட் கார் புக் செய்தவர்களின் காத்திருப்புக் காலம் எப்போதும் விடவும் கூடுதலாக அதிகரித்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் டாப் வேரியன்ட் கார்களுக்கு 3 முதல் 6 மாதம் வரையிலான காலகட்டத்திற்குக் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
ஆட்டோமொபைல் துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் இதே பிரச்சனை தான் என்பதால் டாடா குரூப் இந்த வர்த்தகப் பிரச்சனையைப் பிஸ்னஸ் ஆக மாற்ற முடிவு செய்துள்ளது. டாடா குழுமத்தின் இந்த முடிவைப் பற்றி உங்கள் கருத்து என்ன..?!
சந்திரசேகரன் தலைமையில் டாடா
சந்திரசேகரன் தலைமையிலா டாடா குரூப் பல புதிய துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ள வேளையில், அனைத்து துறையிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டாடா டிஜிட்டல் வர்த்தகம்
குறிப்பாக டாடா டிஜிட்டல் ரீடைல் வர்த்தகம் அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. டாடா குரூப் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போலவே அடுத்தடுத்து நிறுவனத்தைக் கைப்பற்றி வருகிறது.