இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருக்கும் வேளையிலும், அதன் நம்பகத்தன்மை குறைவாக இருக்கிறது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னோடியான டெஸ்லா இந்தியாவிற்கு வருவது பலருக்கும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், சக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.
டெஸ்லா இந்தியா
இந்தியாவில் தனது விற்பனையைத் துவங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் டெஸ்லா, தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான விலையைக் குறைக்க மத்திய அரசிடம் வரி சலுகையைக் கோரியது.
மத்திய அரசு அழைப்பு
இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு பின்பு டெஸ்லாவின் சில உரிதிபாகங்களை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்ட பின்பு மத்திய அரசு இறக்குமதியில் சில சலுகையை அளிக்கப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் எதிர்ப்பு
டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து இந்தப் பதிலைப் பல போராட்டங்களுக்குப் பின்பு பெற்று இருக்கும் இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை
இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே அதிகப்படியான போட்டிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் எதிர்கொண்டு வரும் நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது மிகப்பெரிய போட்டியை உருவாக்கும்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மத்திய அரசு தனது கொள்கை மற்றும் இலக்கில் இருந்து தவறுவதாகவும் டாடா மோட்டார்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மோடி அரசின் FAME கொள்கை
மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களின் தயாரிப்புக்கு உலகளாவிய சந்தை வர்த்தகத்திற்கு இந்தியாவை ஹப் ஆக உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான நோக்கத்தில் FAME என்ற Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicle என்ற கொள்கையை உருவாக்கியது.
இறக்குமதிக்கு வரி விலக்கு
தற்போது டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம் அனைத்து நிறுவனம் இந்தச் சலுகையைப் பெறும் இதனால் இந்தியாவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஹப் ஆக மாற்ற முடியாது. இதைத் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மறைமுகமாகச் சொல்கிறது.
எலக்ட்ரிக் கார் உற்பத்தி
இந்தியாவிலேயே எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதன் மூலம் மலிவான விலையிலும் கொடுக்க முடியும் அதன் மூலம் மக்கள் மத்தியில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியும். இதைத் தான் அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும்.
டாடா மோட்டார்ஸ் ஷைலேஷ் சந்திரா
இறக்குமதியில் சலுகையை அளிப்பதை விடவும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைத் தயாரிப்பை மேம்படுத்த வேண்டும் என டாடா மோட்டார்ஸ் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள டாடா மோட்டார்ஸ் பேசன்ஜர் வெஹிக்கல் வர்த்தகப் பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் கோரிக்கை
டெஸ்லா நிறுவனத்தைப் போலவே தற்போது ஹூண்டாய் நிறுவனம் இறக்குமதி வரியில் தளர்வுகள் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து மத்திய அரசின் FAME கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட திசையை நோக்கிச் செல்லும் நிலை உருவாகும்.
டாடா-வின் டிகார் எலக்ட்ரிக் கார்
இந்நிலையில் நேற்று டாடா மோட்டார்ஸ் தனது டிகார் எலக்ட்ரிக் கார்-ஐ 12 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால் இந்தியாவில் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன சந்தையை உருவாக்க முடியும். இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்த உள்ளது.