உலகளவில் செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கும் வேளையில் இதை வர்த்தகமாக டாடா முடிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் இதுகுறித்து பேசியிருந்த வேளையில் தற்போது தொழிற்சாலை அமைப்பதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளது.
டாடா குழுமம் அடுத்தடுத்த தொழிற்சாலை மற்றும் நிறுவன விரிவாக்கத்தைத் தமிழ்நாட்டில் செய்து வரும் நிலையில் டாடா OSAT தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செமிகண்டக்டர் சிப்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குரூப் தனது செமிகண்டக்டர் சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் யூனிட் அமைப்பதற்காக 3 மாநில அரசுடன் பேச்சுவாத்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றால் சுமார் 300 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டில் ஹெய் டெக் தொழிற்சாலை அமைக்கப்படும்.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா
டாடா குழுமம் தனது outsourced semiconductor assembly and test (OSAT) தளத்தை அமைக்கத் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தி நிலம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
OSAT தொழிற்சாலை
டாடா குழுமம் அமைக்கும் இந்த OSAT தொழிற்சாலையில் சிலிக்கான் வேஃபர்-ஐ அசம்பிளி செய்யவும், டெஸ்ட் செய்யவும், பேகேஜ் செய்யும் பணிகளைச் செய்ய உள்ளது. இந்தச் சிப் இந்தியத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் செல்ல உள்ள காரணத்தால் சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வன்பொருள் தயாரிப்பு
டாடா குழுமம் மென்பொருள் பிரிவில் மிகவும் வலிமை உடன் இருந்தாலும் வன்பொருள் தயாரிப்பில் பெரிய அளவில் வெற்றியை இன்னும் பதிவு செய்யவில்லை, சமீபத்தில் தான் டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகவேகமாகச் செய்து வருகிறது. தற்போது செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
300 மில்லியன் டாலர் முதலீடு
டாடா OSAT தொழிற்சாலைக்கு இன்டெல், AMD மற்றும் ST மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் போன்ற முக்கியமான நிறுவனங்கள் நேரடி வாடிக்கையாளர்களாகக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் இத்தொழிற்சாலை மூலம் 300 மில்லியன் டாலர் முதலீடு கிடைப்பது மட்டும் அல்லாமல் 4000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைத்துள்ள டாடா தற்போது டாடா OSAT தொழிற்சாலையை அமைக்குமா..? டாடாவின் தேவைகளைத் தமிழ்நாடு அரசு பூர்த்திச் செய்யுமா..? தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலத்தில் எந்த மாநிலத்திற்கு ஜாக்பாட்..?!