பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்தது மூலம் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வர்த்தகம், சொத்துக்களையும் டாடா கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
ஆனால் ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் இன்னும் அரசு சொத்துக்களைப் பயன்படுத்தி வரும் காரணத்தால், டாடா குழுமம் இதை முறையாக அரசிடம் ஒப்படைக்க நடைவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவருக்கும் டாடா குழுமம் கெடு விதித்துள்ளது.
ஏர் இந்தியா
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 26-ஆம் தேதிக்குள் மத்திய அரசுக்கு சொந்தமான வீடுகளில் வசித்து வரும் தனது ஊழியர்கள் அனைவரையும் காலி செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளது. ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்த போது அதன் ஊழியர்கள் தங்குவதற்கான வீட்டு வசதிகளை ஏர் இந்தியா நிர்வாகம் அளித்து வந்தது.
அரசு சொத்து
2021ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியாவுக்கான ஏலத்தில் டாடா குழுமம் வெற்றி பெற்றது. இந்த விற்பனையில் சில வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை மத்திய அரசு வைத்துக்கொள்ள முடிவு செய்தது. இதில் இந்த ஏர் இந்தியா ஊழியர்கள் வசித்து வரும் காலனிகளும் அடக்கம்.
ஹவுசிங் காலனி
இதனால் முதலீட்டு விதிமுறைகளின்படி, ஹவுசிங் காலனிகளில் இருக்கும் ஏர் இந்தியா ஊழியர்களை ஜூலை 26-ஆம் தேதிக்குள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளது டாடா குழுமம். ஏர் இந்தியா ஊழியர்கள் வெளியேற்றத்திற்குப் பின்பு டாடா குழும நிர்வாகம் அரசிடம் ஒப்படைக்கும்.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு உத்தரவு
ஏர் இந்தியா டெல்லி மற்றும் மும்பையில் மிகப்பெரிய அளவிலான காலனிகளை வைத்துள்ளது. மே 17ஆம் தேதி அரசின் AI Assets Holding Ltd (AIAHL) நிறுவனம் ஜூலை 26ஆம் தேதிக்குள் ஏர் இந்தியா ஊழியர்களை வீடுகளைக் காலி செய்ய அறிவுறுத்தும் படி டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தான் ஏர் இந்தியா தற்போது உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.