இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தில் வரலாற்று முதல் முறையாக டாடா சன்ஸ் தலைவர் உட்பட அனைத்து டாடா நிறுவனங்களின் சீஇஓ-க்களும் தங்களது வருடாந்திர சம்பளத்தில் சுமார் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களாகச் சிறு, குறு நிறுவனங்கள் மட்டுமே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மே மாத மத்தியில் இருந்து பெரிய நிறுவனங்கள் எதிர்பாராத விதமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, சம்பளத்தைக் குறைப்பது எனப் பல்வேறு செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது டாடா குழுமம் செலவின குறைப்புத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
20 சதவீத சம்பள கட்
கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமம் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே ஒவ்வொரு நிறுவனத்தின் சீஇஓ அதாவது மூத்த அதிகாரிகள் சம்பள குறைப்பை முதலில் ஏற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஊழியர்களை ஊக்குவிக்கவும், நிறுவனமும் நிர்வாகமும் சரிவர இயங்க வேண்டும், எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் வர்த்தக இயங்க ஏதுவான சூழ்நிலை அமைத்துக்கொடுக்கவே இந்தச் சம்பள குறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது என டாடா நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ராஜேஷ் கோபிநாத்
டாடா குழுமத்தின் மிகவும் லாபகரமான நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் தான் முதன் முதலில் சம்பள குறைப்பை அறிவித்தார்.
கடந்த நிதியாண்டில் 16.04 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்ற ராஜேஷ் கோபிநாத் மார்ச் உடன் முடிந்த 2020ஆம் நிதியாண்டில் 16.5 சதவீதம் குறைந்து 13.3 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
டிசிஎஸ் தவிர வேறு எந்த டாடா நிறுவனமும் 2020ஆம் நிதியாண்டு அறிக்கையை வெளியிடாத நிலையில், கடந்த நிதியாண்டு அதாவது 2019ஆம் நிதியாண்டில் டாடா நிறுவனத் தலைவர்கள் வாங்கிய சம்பளத்தைப் பார்ப்போம்
சந்திரசேகரன்
2019ஆம் நிதியாண்டில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், டாடா குழுமத்தின் லாப அளவீடுகளுக்காகக் கமிஷன் தொகையாக 54 கோடி ரூபாயுடன் சேர்ந்து மொத்தம் 65.52 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றார். இது 2018ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில் 2020ஆம் நிதியாண்டுக்கான இவரது சம்பளம் விரைவில் அறிவிக்கப்படும்.
போனஸ் தொகை
டாடா ஸ்டில், டாடா பவர், டாடா மோட்டார்ஸ், Trent, டாடா இண்டர்நேஷனல், டாடா கேபிடல், வோல்டாஸ் மற்றும் இதர டாடா நிறுவனங்களின் நிர்வாகத் தலைவர்கள் மற்றும் சிஇஓ-க்களின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பள குறைப்பு அனைத்தும் தலைவர்களின் போனஸ் தொகையில் தான் இருக்கும் என டாடா குழுமத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பள அளவீடுகள்
2019ஆம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் Guenter Butschek 26.29 கோடி ரூபாய் தொகை சம்பளமாகப் பெற்றுள்ளார். இதேபோல் டாடா ஸ்டீல் டிவி நரேந்திரன் 11.23 கோடி ரூபாயும், டைட்டன் தலைவர் பாஸ்கர் பட் 6.93 கோடி ரூபாயும், இந்தியன் ஹோட்டல்ஸ் புனித் சாட்வால் 6.02 கோடி ரூபாயும், வோல்டாஸ் தலைவர் பிரதீப் பாக்ஷி 4.51 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
வர்த்தக விபரங்கள்
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள 33 டாடா நிறுவனங்களின் விற்பனை 2019ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் அதிகரித்து 7.52 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெற்றாலும், லாப அளவீடுகள் 20 சதவீதம் சரிந்துள்ளது.
தற்போது கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை 2020ஆம் நிதியாண்டில் அதிகமாக இருந்த நிலையில் லாப அளவுகள் மேலும் குறையலாம் எனக் கணிக்கப்படுகிறது.