இந்தியாவில் ஜி20 கூட்டம் நடக்கும் நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கான ஜி20 அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இக்கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையிலும், உலக நாடுகள் வியக்க வைக்கும் அளவிற்கும் நடத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காகச் சில நாட்களுக்குத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களைப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுப் பிரதமர் மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து முக்கியமான அறிவிப்பு மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
டாடா சன்ஸ் சந்திரசேகரன்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், இந்தியாவின் ஜி20 பிரசிடென்சி காலத்தின் போது வணிக நிகழ்ச்சி நிரலை வழிநடத்த பி20 இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி20 கூட்டத்தில் வணிகச் சமூகம்
ஜி20 கூட்டத்தில் வணிகச் சமூகத்தின் குரலாக இருப்பது B20 என்பதால் இது முக்கியமான பொறுப்பாகப் பார்க்கப்படுகிறது. ஜி20 கூட்டத்தின் பணிகளை மத்திய அரசு செய்து வரும் நிலையில் B20 கூட்டத்தின் பணிகளை நிர்வாகம் செய்ய இந்திய அரசு CII அமைப்பை நியமித்துள்ளது.
பி20 இந்தியா
இதனால் ஜி20 கூட்டத்தின் பி20 இந்தியா பிரிவின் தலைவராக டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம், ஒப்புதல் ஆகியவற்றைச் சிஐஐ அமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய விஷயங்கள்
உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வர்த்தக நெகிழ்ச்சியை உருவாக்குதல், தொழிலாளர்களின் திறன் மற்றும் இயக்கம், நிதியளிப்பதில் வளர்ச்சி மற்றும் நிலையான உள்கட்டமைப்பு, காலநிலை மாற்றம், வளங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதின் மூலம் செயல்திறன் மேம்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் G20 பிரசிடென்சி காலத்தின் போது இந்திய முக்கியமானதாகக் கருதி இதை விவாதிக்க உள்ளது.
B20 இந்தியா கூட்டம்
2023 ஜனவரி 22-24 தேதிகளில் திட்டமிடப்பட்ட தொடக்கக் கூட்டத்திற்குப் பிறகு B20 இந்தியா பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் செயல் கூட்டங்கள் மூலம் பணியாற்றத் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2023 இல் B20 இந்தியா-வின் உச்சி மாநாடு முடிவடையும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜி20 கூட்டத்திற்கான இந்தியாவின் பிரசிடென்சி காலத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உலகளாவிய கொள்கைகள், வரி விதிப்பு மற்றும் கடன் நெருக்கடி போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
G20 நாடுகள்
G20 நாடுகள் என்பது வெறும் அமைப்பு இல்லை, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவிகிதம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு என உலகின் போக்கை மாற்றும் சக்தி கொண்ட அமைப்பு.
20 நாடுகளின் பட்டியல்
G20 நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது.
முக்கிய அமைப்புகள்
ஒவ்வொரு ஆண்டும் ஜி20 மாநாட்டிலும் IMF, ஐநா, உலக வங்கி, உலகச் சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, OECD, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற உலகின் பல முக்கியமான அமைப்புகளும், அதன் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.
அம்பானி, அதானி
இந்த நிலையில் ஜி20 கூட்டத்தில் பி20 அமைப்பு எந்த அளவிற்கு முக்கியம் என அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியும். இக்கூட்டத்தின் தலைவர் பதவி இந்தியாவின் பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்களான அம்பானி, அதானிக்கு அளிக்கப்படாமல் டாடா சன்ஸ் தலைவர் மற்றும் தமிழருமான என்.சந்திரசேகரன்-க்கு அளித்துள்ளது CII அமைப்பு.