இந்திய அரசுக்கு சொந்தமான விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா அதீத கடன், குறைந்த அளவிலான வர்த்தகம் என பல பிரச்சனைகள் மத்தியில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு பல வருடங்களாக முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அரசு விற்பனை செய்யும் பங்கு அளவீடுகள் மாற்றப்பட்டு விருப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதிலும் விமான போக்குவரத்து முடங்கியிருந்த நிலையில் ஏர் இந்தியா விற்பனைக்கு விண்ணப்பங்கள் கோரிய நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இது இந்திய விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை.
ஏர் இந்தியா ஊழியர்கள் திட்டம்
ஏர்இந்தியா நிறுவனத்தை கைப்பற்ற சில நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. அந்த வகையில் எல் அண்ட் டி நிறுவனத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த அதே புரட்சி ஏர் இந்தியா ஊழியர்கள் மத்தியிலும் வெடித்தது.
ஏர் இந்தியா ஊழியர்கள் கூட்டணி
இதன் படி ஏர் இந்தியா ஊழியர்கள் ஒன்றாக இணைந்து நியூயார்க் பங்கு முதலீட்டு நிறுவனமான இன்டரப்ட்ஸ் பண்ட்ஸ் உடன் இணைந்து ஏர்இந்தியா நிறுவனத்தை கைப்பற்ற விண்ணப்பம் கொடுத்தது. அரசு நிறுவனங்கள் மத்தியில் ஏர் இந்தியா ஊழியர்களின் முயற்சி வியந்து பார்க்கப்பட்டது.
தகுதியை இழந்தது
இந்நிலையில் ஏர்இந்தியா ஊழியர்கள் குழு - இன்டரப்ட்ஸ் பண்ட்ஸ் கூட்டணியின் விண்ணப்பம் ஏர்இந்தியா நிறுவனத்தை கைப்பற்ற தகுதி இழந்துள்ளது. இதனால் இக்கூட்டணியின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டாடா மற்றும் ஸ்பைஸ்ஜெட் மட்டுமே வாய்ப்பு
இதன் எதிரொலியாக ஏர்இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் போட்டியில் தற்போது விஸ்தாரா, ஏர்ஏசியா இந்தியா நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா குழுமம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மற்றும் மலிவுவிலை விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே போட்டியில் உள்ளது.
பல நிறுவனங்கள் தோல்வி
ஏர்இந்தியா ஊழியர்கள் குழு உட்பட எஸ்ஸார், பவன் ரூயாவின் டன்லப், பால்கன் டையர்ஸ் ஆகிய நிறுவனங்களின் விருப்ப விண்ணப்பங்களையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா விமான போக்குவரத்தில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் பல புதிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறது.
அரசின் 6வது முயற்சி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய 6வது முறையாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்காக அறிவித்து விருப்ப விண்ணப்பங்கள் கோரியது. ஆனால் மத்திய அரசின் இத்திட்டத்திற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
விற்பனை அளவீட்டில் மாற்றம்
இதை தொடர்ந்து லாக்டவுன் காலத்தில் அரசு தனது 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி நிதி திரட்டும் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக இந்த முறை மத்திய அரசு ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியாவின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிறுவனமான AI-SATS பிரிவில் 50 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து விருப்ப விண்ணப்பத்தைப் பெற்றது.
60,074 கோடி ரூபாய் கடன்
மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் ஏர் இந்தியாவின் மொத்த கடன் மதிப்பு 60,074 கோடி ரூபாய், இதில் 23,286.5 கோடி ரூபாய்க் கடனை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏற்க வேண்டும். எஞ்சியுள்ள தொகையை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்றுக்கொள்ளும்.
ஏர் இந்தியா-வின் மோசமான நிலை
ஒரு காலத்தில் இந்திய விமானப் போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏர் இந்தியா வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், தனியார் நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியின் காரணமாகவும் தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.