இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். இந்த குழுமத்தில் உள்ள முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் அதன் அனைத்து ஊழியர்களுக்கு போனஸினை அறிவித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், டாடா ஸ்டீல் நிறுவனம் 2020 - 21ம் ஆண்டிற்கான 270.28 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸினை, அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வளவு போனஸ்?
மேற்கண்ட இந்த ஊக்கத்தொகையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள அதன் பிரிவுக்கு 158.31 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 34,920 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3,59,029 ரூபாய் போனஸாக கிடைக்கும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்த போனஸ் தொகைக்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிவி நரேந்திரன் மற்றும் துணைத் தலைவர் அத்ரயீ சன்யால், இவர்கள் தவிர மற்ற மூத்த அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் தவிர டாடா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் குமார் சவுத்ரி, டாடா தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சைலேஷ் குமார் சிங், தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமார் சிங் மற்றும் பிற ஊழியர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லாபம் எவ்வளவு?
டாடா ஸ்டீல் நிறுவனம் அதன் ஏப்ரம் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 9,768 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தினை ஈட்டியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 4,648 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வரி, வட்டி, தேய்மானம் ஆகியவற்றிற்கு பிறகான லாபம் மார்ச் காலாண்டில் 36% அதிகரித்து, 7,161 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
வருவாய் எவ்வளவு?
வரி வட்டி, தேய்மானத்திற்கு முந்தைய லாபமாக 16,185 கோடி ரூபாயும், இது தொடர்ந்து சந்தையில் வலுவான வளர்ச்சியினைகான வாடிக்கையாளர்களுடனான உறவினை பலப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உள்ள உறவினை மேம்படுத்த டிஸ்டிரிபியூசன், விநியோக சங்கிலி, பிராண்ட் விரிவாக்கம், புதிய பொருட்கள் அறிமுகம், புதிய பல மெட்டீரியல்கள் என தொடர்ந்து வணிகத்தினை மேம்படுத்தி வருவதாகவும் டாடா ஸ்டீல் தனது அறிக்கையில் சமீபத்தில் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
ஊழியர்களுக்கு ஊக்கம்
இந்த நிலையில் தற்போது அதன் ஒரு கட்டமாக நிறுவன ஊழியர்களுடனான உறவினையும் பலப்படுத்தும் விதமாக நிறுவனம் இத்தகைய அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களை இன்னும் நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட உதவும் என நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டையை கிளப்பிய விற்பனை
உண்மையில் ஊழியர்களுக்கு இது ஒரு ஊக்கத்தினை கொடுக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை எனலாம். இதற்கிடையில் டாடா நிறுவனம் ஆசியாவில் முதல் ஒருங்கிணைந்த ஸ்டீல் நிறுவனம் எனலாம். இது கடந்த 1907ல் உருவாக்கப்பட்ட ஒரு தரமான நிறுவனம். இது ஜாம்ஷெட்பூரையே ஒரு தொழில் நகரமாக மாற்றியுள்ளது. கடந்த 2021ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை 91,037 கோடி ரூபாயாகும்.