இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், பிரிட்டன் நாட்டில் இருக்கும் டாடா ஸ்டீல் வர்த்தகத்தை மூடிவிட்டு முழுமையாக வெளியேறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் இந்திய மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பல முக்கியமான மாற்றங்களையும், மறுசீரமைப்பையும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகப் பிரிட்டன் நாட்டில் இருக்கும் டாடா ஸ்டீல் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இதற்குப் பிரிட்டன் அரசு தரப்பில் இருந்து சரியான ஒத்துழைப்பும், ஒப்புதலும் கிடைக்காத நிலையில் டாடா ஸ்டீல் பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேற முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா ஸ்டீல் தொழிற்சாலை
டாடா சன்ஸ் பிரிட்டன் நாட்டில் இருக்கும் டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் பிளாஸ்ட் பர்னேஸ்-க்கு பதிலாக எலக்ட்ரிக் ஆர்க் பர்னேஸ்-ஐ அடுத்தச் சில வருடங்களில் மாற்றி அமைக்க முடிவு செய்தது. இதன் மூலம் கூடுதல் முதலீடு தேவைப்பட்டாலும் பசுமை தொழிற்சாலையாக மாறுவது மட்டும் அல்லாமல் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் சாதகமான மாற்றம் உருவாகும்.
1.5 பில்லியன் பவுண்ட் மானியம்
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும், முதலீடு செய்யவும் டாடா சன்ஸ் தயாராக இருக்கும் நிலையில், இதைச் செயல்படுத்தப் பிரிட்டன் அரசிடம் சுமார் 1.5 பில்லியன் பவுண்ட் அளவிலான மானிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ் தலைமையிலான அரசு இதற்கான முடிவை எடுக்காமல் இருக்கும் நிலையில் டாடா ஸ்டீல் நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்பதால் பிரிட்டன் வர்த்தகத்தை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகளைத் தேட துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குரூப்
பிரிட்டன் நாட்டில் பல வருடங்களாகப் பல துறையில் இயங்கி வருகிறது டாடா குரூப், எங்களுக்குப் பிரிட்டன் நாட்டின் பல அமைப்புகள் உதவி வருகிறது. வர்த்தகத்தை மூடிவிட்டு வெளியேறுவது எங்களது கொள்கையில்லை, ஆனால் அரசும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டாடா குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.
5 மில்லியன் டன் ஸ்டீல்
பிரிட்டன் நாட்டின் Port Talbot பகுதியில் இருக்கும் டாடா ஸ்டீல் தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 5 மில்லியன் டன் ஸ்டீல் தயாரிக்க முடியும்.
2 வருடம்
இந்த நிலையில் இத்தொழிற்சாலை இயக்குவதற்கு அதிகப்படியான செலவுகள் ஆகும் நிலையில் தான் 1.5 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான மானிய திட்டத்தை முன்வைத்துள்ளது, ஆனால் இதற்கு 2 வருடமாக எவ்விதமான பதிலும் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை என எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் பங்குகள்
டாடா ஸ்டீல் பங்குகள் இன்று 0.65 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 100.65 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டு மொத்த பர்பாமென்ஸ் அளவை பார்க்கும் போது டாடா ஸ்டீல் பங்குகள் கடந்த 9 மாதம் 14 நாட்களில் 11.87 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.