இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான டாடா , சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம் பல அண்டை நாடுகளிலும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகின்றது.
இங்கிலாந்திலும் செயல்பட்டு வரும் டாடா ஸ்டீல் தொடர்ந்து அங்கு தனது இருப்பினை உறுதிபடுத்த, பிரிட்டீஷ் அரசாங்கம் 1.5 பில்லியன் பவுண்ட் நிதியினை உறுதி படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.
அப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் உறுதி செய்யாத பட்சத்தில் அங்கிருந்து வெளியேறலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
முக்கிய முடிவு
டாடா ஸ்டீல் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் அதன் நிறுவனத்தினை பசுமை ஆற்றலுக்கு ஏற்ப மறுசீரமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இத்தகைய தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த தகவலானது செப்டம்பர் 2022ல் இங்கிலாந்தில் புதிய பிரதமர் பதவியேற்க உள்ள நிலையில், தற்போதைய பிரதமர் இந்த முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கட்டாயம்
இங்கிலாந்தில் பசுமை ஆற்றலுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், டாடா ஸ்டீல் மற்றும் சீனாவின் ஸ்டீல் நிறுவனம் உள்ளிட்ட ஸ்டீல் நிறுவனங்கள் இத்தகைய முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேற்கண்ட இந்த இரண்டு நிறுவனங்களுமே இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஸ்டீல் உற்பத்தியில் 85%-க்கும் அதிகமாக பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது.
வேலை வாய்ப்பு
டாடா நிறுவனத்தின் போர்ட் டால்போட் இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியளராக இருக்கும் நிலையில், அங்கு 4000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கிலாந்து தனது மொத்த நுகர்வில் 70% ஸ்டீலினை (10 மில்லியன் டன்), இங்கிலாந்திலேயே உற்பத்தி செய்து வருகின்றது.
கார்பன் உமிழ்வை தடுக்க வேண்டிய கட்டாயம்
உலகின் பல்வேறு நாடுகளும் கார்பன் உமிழ்வை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்து அரசு 2050-க்குள் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதற்காக கடந்த 2019லேயே ஒரு சட்டத்தினை உருவாக்கியது. ஆக பசுமை ஆற்றலுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அரசு உள்ளது.
சந்திரசேகரன் கருத்து
டாடா குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன், இங்கிலாந்து அரசாங்கம் உதவ முன்வராவிட்டால், இங்கிலாந்தில் உள்ள ஆலையை மூடலாம் என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். டாடா ஸ்டீல் கார்பன் உமிழ்வினை குறைக்க கவனம் செலுத்தப்படுவதாகவும், இதற்காக இங்கிலாந்து அரசின் உதவி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நஷ்டத்தில் இருந்து லாபம்
முந்தைய ஆண்டில் 347 மில்லியன் டாலர் நஷ்டத்தினை பதிவு செய்த நிறுவனம், மார்ச் 2022வுடன் முடிவடைந்த ஆண்டில் 82 மில்லியன் பவுண்ட் வரிக்கு முந்தைய லாபத்தினை பதிவு செய்துள்ளது. டாடா ஸ்டீலின் இந்த இங்கிலாந்து ஆலையில் 4000 பேர் பணியாற்றுகிறார்கள் என்றாலும், தொடர்ந்து இதனால் மறைமுகமாகவும் பல ஆயிரம்பேர் வேலையினை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.