இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எனத் திட்டவட்டமாகத் தெரியும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் இத்துறையில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது.
குறிப்பாக எலக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் டாடா புதிதாக ஒரு உற்பத்தி தளத்தைப் பஞ்சாபில் அமைக்க முடிவு செய்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ்
உலகளாவிய பொறியியல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் பஞ்சாபில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளதாக அம்மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது,
பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-ஐ புதன்கிழமை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் டாடா டெக்னாலஜிஸ் குழு சந்தித்து உள்ளது. இதன் மூலம் விரைவில் இப்புதிய தளத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்து முதலீடு செய்தற்கான அறிவிப்புகள் உறுதி செய்யப்பட்ட பின்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அதிகாரிகள்
டாடா டெக்னாலஜிஸின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஹாரிஸ், குளோபல் ஹெச்ஆர் மற்றும் ஐடி தலைவர் பவன் பகேரியா மற்றும் பலர் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் சந்தித்தனர்.
1850 கோடி ரூபாய் முதலீடு
இப்புதிய தளத்தை அமைக்க முதல்கட்டமான 250 கோடி ரூபாயை முதலீடு செய்யவும், 1,600 கோடி ரூபாய் தொகையை எதிர்காலத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுப் பஞ்சாபில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது டாடா.
MSME
டாடா குழுமத்தின் புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளம் கிளீன் மொபிலிட்டி ஆதரவாகவும், பஞ்சாபில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், EV பிரிவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவின்யா கார்
டாடா சமீபத்தில் அறிமுகம் செய்த அவின்யா கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரையில் பயணிக்கக் கூடத் திறன் கொண்டதாகவும், இந்தக் காரில் டெஸ்லா தயாரிப்பில் இருப்பது போலவே இரண்டு மோட்டார்கள் கொண்டு இருக்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்தக் கார 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது டாடா.