இந்தியாவில் கொரோனா காரணமாக மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த வர்த்தகம் 95 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகவும், இத்துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது மத்திய அரசு
இதன்படி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கொரோனா காலத்தில் பாதிப்படைந்த இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்று அறிவிக்கப்பட்ட 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் ரியல் எஸ்டேட் சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் அறிவித்துள்ளார்.
விலை வித்தியாசம்
ரியல் எஸ்டேட் துறை விற்பனையை அதிகரிக்கச் சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் விற்க முடியாமல் வீடுகளை வைத்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தச் சலுகை மூலம் குறைவான விலைக்கே விற்பனை செய்ய முடியும்.
முதல் வீடு
இதனால் முதல் முறையாக வீடு வாங்குவோருக்குப் பத்திர விலையில் செய்யப்படும் மாற்றத்தின் மூலம் அதிக வருமான வரிச் சலுகை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் பெரு நகரங்களில் கிடப்பில் இருக்கும் பல ஆயிரம் வீடுகள் விற்பனை சந்தைக்கு வர உள்ளது. இதேபோல் இந்தச் சலுகை ஜூன் 2021 வரையில் மட்டும் தான் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
மக்கள் மத்தியில் வீட்டு வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், முதல் முறையாகச் சொந்த வீடு வாங்குவோருக்குப் பலன் அளிக்கும் வகையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2020-21ஆம் நிதியாண்டுக்கு சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாகத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே 8000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
78 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்த 18,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூவம் இந்தியாவில் சுமார் 12 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட துவங்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவும் முடியும்.
இதுமட்டும் அல்லாமல் சுமார் 78 லட்சம் வேலைவாய்ப்புகள் ரியல் எஸ்டேட் துறையில் உருவாக இந்த நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் உதவும்.
லாக்டவுன்
லாக்டவுன் காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்தை இழக்க நேர்ந்த காரணத்திற்காக வீடுகளின் விற்பனை அதிகளவில் குறைந்தது, இதோடு பல கோடி மக்கள் 6 மாத கடன் சலுகையைப் பயன்படுத்தி வீட்டுக் கடனுக்கான தவணையைச் செலுத்துவதை ஒத்திவைத்தனர்.
அலுவலகங்கள் மூடல்
இதோடு பல முன்னணி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளைச் சமாளிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் பெரு நகரங்களில் இருக்கும் அலுவலகங்களை நிரந்தரமாக மூடி ஊழியர்களுக்குக் காலவரையற்ற work from home சலுகை கொடுத்துள்ளது.
இதனால் பல நூறு நிறுவனங்களின் அலுவலக லீஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
வளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட்
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலகட்டமான ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வெறும் 9632 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூன் - செப்டம்பர் காலாண்டில் சுமார் 33,403 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இந்திய ரியல் எஸ்டேட் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.